ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 76–வது இடம் கிடைத்து உள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறியுள்ளார் .
ஊழல் நாடுகள் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறியதாவது:–
ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கையைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தலைவர்கள் அறிவித்த எதிர்பார்ப்புகள் அவ்வளவாக நிறைவேறவில்லை.
வங்காளதேசம், கம்போடியா ஆகிய 2 நாடுகளும் ஊழலால் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாகின. ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் ஊழலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஊழலுக்கு எதிராக சீனா எடுத்து வரும் நடவடிக்கைகளால் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015–ல் 64 நாடுகள் ஊழலை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளன. 53 நாடுகள் இதில் பின்தங்கின. மற்ற நாடுகளின் நிலையில் ஏற்ற, இறக்கம் எதுவும் இல்லை என்று ஜோஸ் உகாஸ் தெரிவித்துள்ளார்
உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது. 2015–ம் ஆண்டு இந்த தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டுக்கு 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் 2014–ம் ஆண்டைப் போலவே ஐரோப்பிய நாடான டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்தை பெற்றது. பின்லாந்துக்கு 2–வது இடமும், சுவீடனுக்கு 3–வது இடமும் கிடைத்தன. ஆப்பிரிக்க நாடான சோமாலியாவும், ஆசியா நாடான வடகொரியாவும் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்தன. இந்தியாவுக்கு 76–வது இடம் கிடைத்து உள்ளது. 2014–ம் ஆண்டு 85–வது இடத்தில் இருந்த இந்தியா 9 இடங்கள் முன்னேறி இருக்கிறது. 2014–ல் இருந்ததைவிட இந்தியாவில் 2015–ல் ஊழல் சற்று குறைந்து காணப்படுகிறது. எனினும், இதில் இந்தியா பெற்றுள்ள மொத்த மதிப்பு 2014–ம் ஆண்டைப் போலவே 100–க்கு 38 ஆக இருக்கிறது.
இந்தியாவின் அண்டை நாடான பூடான் ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் 27–வது இடம் வகிக்கிறது. இந்த நாடு 100–க்கு 65 மதிப்பை பெற்று இருக்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவுக்கு ஊழல் பட்டியலில் 83–வது இடமும், வங்காளதேசத்துக்கு 139–வது இடமும் கிடைத்தது.
பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் 2014–ம் ஆண்டு இருந்ததைவிட ஊழல் மலிந்து காணப்படுகிறது. இதனால் இந்த நாடுகள் ஊழல் தரவரிசை பட்டியலில் தங்களது இடங்களை சற்று உயர்த்திக் கொண்டு உள்ளன என்று ஜோஸ் உகாஸ் கூறியுள்ளார் .


