சென்னை:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக, சென்னை உள்பட எட்டு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், அலுவலர்களுடன் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வியாழக்கிழமை இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெறும். இருப்பினும் இந்த ஆண்டு சற்று முன்னரே நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.அதிமுக, திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதான கட்சிகளில் ஏராளமானோர் விருப்ப மனுக்களையும் கொடுத்து வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. வாக்காளர் இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னை உள்பட 8 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலர்களுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.


