2ஜி அலைக்கற்றை ஓதுக்கீட்டு உழல் முறைகேடு வழக்கில், குற்றம்சாட்டவர்கள் தரப்பு இறுதிவாதம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
இந்த வழக்கில் சிபிஐயின் இறுதி வாதங்கள், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ஆ.ராசா தவறாக வழிநடத்தியதாக அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராசா, கனிமொழி ஆகியோரின் வழக்கறிஞர்கள் இன்று வாதங்களை முன்வைத்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
2 ஜி அலைக்கற்றை ஓதுக்கீட்டு உழல் வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கனிமொழியின் மனு 3 மாதங்களுக்கு முன்பாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று தள்ளுபடிசெய்யப்பட்டது.கனிமொழியின் மனு போன்ற, அதே கோரிக்கைகளை கொண்டிருந்த ஷாஹித் பல்வாவின் மனுவும் அப்போது தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை இந்த வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைவும் உச்சநீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தள்ளுபடி செய்தது.
சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மீதும் 9 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வழக்கின் விசாரணை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் தனித்தனியாக தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறும் இவர்கள் தரப்பு இறுதி வாதங்களில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறுவதற்கான வாதத்தை மீண்டும் முன்வைப்பார்கள்.
கலைஞர் தொலைக்காட்சியில் சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி, அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தரப்பில் ரூ. 200 கோடி பணம் வழங்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் அதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு அந்த 200 கோடி ரூபாய் பணத்தை அளித்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அலைக்கற்றை ஓதுக்கீட்டு உழல் முறைகேடு வழக்கில் இறுதி வாதங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன


