தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக உள்ளவரின் மகன் திலிபன் மகேந்திரன் என்ற இளைஞர் இந்திய தேசியக்கொடியை எரித்து அதை புகைப்படமாக முகனூலில் வெளியிட்டமைக்காக கைது செய்யபட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த திலிபன் மகேந்திரன் என்ற இளைஞர் இந்திய தேசிய கொடியை எரித்து அதை புகைப்படமாக எடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் முகனூலில் வெளியிட்டு இருந்தார் .
அந்த இளைஞரது முகனூல் பக்கத்தில் அளித்துள்ள விபரத்தில் அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து தற்போது சென்னையில் வசித்து வருபவர் என்றும் குறிப்பிட்டு இருந்தது.
இந்திய தேசிய கொடியை திலிபன் மகேந்திரன் எரித்த புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது .
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தமிழகத்தை சேர்ந்த பலர் இந்திய தேசிய கொடியை எரித்த திலிபன் மகேந்திரன் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நாராயணன் என்பவர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து காவல் துணை ஆணையாளர் மயில்வாகனன் தலைமையில் தனிப்படை அமைத்து இந்திய தேசிய கொடியை எரித்த இளைஞர் திலிபன் மகேந்திரனை காவல் துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் தேசியக்கொடியை எரித்த படத்தில் உள்ள இளைஞர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு பதுங்கி இருந்த திலிபன் மகேந்திரனை கைது செய்தனர்.
காவல் துறையினர் அவனிடம் விசாரணையில், அவன் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடைய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், திலிபன் மகேந்திரனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


