தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மக்களை சந்தித்து வரும் சுற்றுப் பயணத்தின் இறுதியில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்ததாவது :-
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் த.மா.கா. சார்பில் போட்டியிட விரும்புவோர், தங்களது விருப்ப மனுக்களை வரும் 10–ந்தேதி முதல் 12–ந்தேதி வரை சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ள அந்தந்த மாவட்டங்களிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனது சுற்றுப்பயண முடிவில், அதாவது இந்த மாத இறுதியில் தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவு வெளியாகும். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளோடும், பொதுமக்களிடமும் பேசிவருகிறேன். த.மா.கா.வின் தனித்தன்மை இழந்துவிடாமல் தேர்தல் முடிவு எடுப்போம்.
தமிழ் மாநில கட்சி சார்பில் மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 137 தொகுதி மக்களை சந்தித்துள்ளேன். இம்மாதம் இறுதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீதமுள்ள தொகுதி மக்களை சந்திப்பேன்.
இந்த சந்திப்பின் இறுதியில் வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தமாகா இடம் பெறும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
தேர்தல் நேரத்தில் தொண்டர்களைத் திரட்டி வலிமையை காட்டும் மாநாடு நடத்துவதை தமாகா ஏற்கவில்லை.
தொண்டர் அணி நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, பிற நேரங்களிலும் பாராட்டும் வகையில் உழைத்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த மழை, வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிதும் உதவி செய்தார்கள். அவர்களைப் பாராட்டுகிறேன்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையா வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் அதன் பயனை நுகர்வோருக்கு வழங்காமல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி வருகிறது. இதை திரும்பப்பெற்று, விலை குறைப்பின் பலன் நுகர்வோருக்கு சென்றடைய வேண்டும் என்று ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .


