உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஓரினச் சேர்க்கை குற்றமற்ற செயல் என அறிவிக்கக்கோரிய மனு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையில் விரும்பி ஈடுபடுவது சட்டப்படி குற்றமல்ல என்று கடந்த 2009ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
மேலும், ஓரினச் சேர்க்கையை குற்றம் எனக் கூறும் அரசியல் சட்டப்பிரிவு 377-ஐ, ரத்து செய்வதாகவும் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.
இதை எதிர்த்து ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை விசாரித்தது.
பின்னர், இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு ஓரினச் சேர்க்கை ஆதராளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


