மதுரை மக்களவை தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய சுயேச்சை வேட்பாளர் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார் கே.கே.ரமேஷ். அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “அண்மையில் மதுரையில் அதிமுகவினர் சார்பில் சவுராஷ்டிரா சமூக மக்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு உணவு, ஸ்ட்வீட் பாக்ஸ் தவிர ரூ.500 வழங்கப்பட்டது.
வேட்பாளர்கள் செலவுக் கணக்கு போலியாக சமர்ப்பிக்கப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
எனவே தேர்தலை நியாயமாக நடத்த வாய்ப்பில்லாத சூழல் இருப்பதால் மதுரையில் மக்களவைத் தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும்” எனக் குறிபிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


