கோவில் யாத்திரை மற்றும் சுற்றுலாவுக்காக சென்ற 311 தமிழர்கள் அங்கு சிக்கித் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் பத்திரமாக தமிழகம் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை உதவி மையங்கள் மூலம் எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிலநடுக்கத்திற்கு பிறகு நேபாலில் தமிழர்கள் யாராவது சிக்கியிருக்கிறார்களா? என தேடும் பணியை தமிழக அரசு உடனடியாக முடுக்கி விட்டுள்ளது. அவர்களை மீட்டுக் கொண்டு வர போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது. உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சுற்றுலா மற்றும் ஆன்மிக யாத்திரையாக சென்ற 311 தமிழர்கள் அங்கு சிக்கியிருப்பதாக தெரிகிறது. எனினும், யாரும் பயப்பட தேவையில்லை. அவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள். உறவினர்கள் யாரும் பயப்பட வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறையும் உறுதி செய்துள்ளது. நேபாலில் சிக்கியுள்ள தமிழர்களின் உறவினர்கள் 011-21493460 மற்றும் 011-24193456 டெல்லியின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், 1070 என்ற இலவச உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

