புது தில்லி: தமிழகத்துக்கான ஐந்து முக்கிய கோரிக்கைகளை மையமாக வைத்து பிரதமரை இன்று சந்திக்கவுள்ளதாகக் கூறி, நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் விஜயகாந்த். இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிலருடன் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பின்னர் அவர் தில்லியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தம்மிடம், பிரதமர் தமிழகத்துக்கு நல்லது செய்வதாக உறுதி அளித்தார் என்று கூறினார். மேலும், நிலம் கையகப் படுத்தும் மசோதா விவகாரத்தில், விவசாயிகளுக்கு துரோகம் செய்ய மாட்டோம் என பிரதமர் உறுதி அளித்ததாக விஜயகாந்த் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாகக் கூறிய விஜயகாந்த், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமரைச் சந்திக்க வேண்டிய அவசியம் எழுந்தது குறித்துக் கூறினார். இந்த விவகாரம் குறித்துக் கூறிய அவர் தமிழர்கள் பிரச்னைகளுக்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என்றார். மேலும், தாங்கள் பாமக தரப்புக்கு அழைப்பு விடுத்தும், பாமக அதை ஏற்கவில்லை என்றும், தங்கள் கட்சியின் சார்பில் யாரையும் அனுப்பவில்லை என்றும் கூறினார். இடையில் அவர் வழக்கமான தனது ஸ்டைலில் ஒரு செய்தியாளரை அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகக் கட்சிகள் பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்த விஜயகாந்த்
Published:

