டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப் பட்டுள்ளது.
அதிமுக.,வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்று, தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாளர்களாக மாறியுள்ளனர், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் ஆகியோர். இவர்கள் மூவரும், தினகரனின் அமமுகவில் இணைந்து, அக்கட்சியில் பொறுப்புகள் பெற்றுள்ளதாகவும், இந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்குமாறு தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அதிமுக., குற்றம் சாட்டியுள்ளது.
இதை அடுத்து, சபாநாயகர் தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசித்து, அந்த மூன்று எம்.எல்.ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அமமுக., பொதுச் செயலர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக., எம்.எல்.ஏ,க்களுக்கு அக்கட்சியால் அனுப்பப் பட்டுள்ள நோட்டீஸுக்கு, எதிர்க்கட்சியான திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை அடுத்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து ஸ்டாலின் அளித்த மனு பேரவைச் செயலாளரிடம் வழங்கப் பட்டுள்ளது.
நேற்று இந்த நோட்டீஸை மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் பெற்றனர். 185 பக்கங்கள் கொண்ட அந்த நோட்டீஸில் இம்மூவரும் டி.டி.வி.தினகரனுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 4 படங்களின் நகல்களும் இணைக்கப்பட்டுள்ளது. கட்சித்தாவல் தடைச்சட்டம் தொடர்பான விளக்கம், அது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு போன்றவற்றையும் அந்த நோட்டீஸில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸால் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. எப்படியாவது முதல்வர் ஆகி விடுவது என்ற கனவுடன் முன்னாள் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் எல்லா வழிகளிலும் முயன்று வருகிறார்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது, முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை முன்னிறுத்துவது குறித்து கேள்வி கேட்டபோது, திமுக., தலைவராக இருந்த மு.கருணாநிதி அதை மறுத்தார். மேலும், எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் வருவார் என்று கூறினார். அந்தத் தேர்தலில் திமுக., ஆட்சிக்கு வர முடியவில்லை. அதே நேரம் அதிமுக.,வின் ஜெயலலிதா முதல்வராக தொடர்ந்தார். இருப்பினும், தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மூன்று மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.
அதே போல், திமுக., தலைவர் கருணாநிதியும் வெகு நாட்கள் உடல் நலக் குறைவால் மருத்துவமனைக்கு வந்து போவதாக இருந்தார். வீட்டிலேயே முடங்கிக் கிடந்து பின் உயிரிழந்தார். கருணாநிதி கூறியது போல், அவரது மறைவுக்குப் பின்னரே, ஸ்டாலின் திமுக., தலைவர் ஆக முடிந்தது. தொடர்ந்து, தனது ஆசைக் கனவான முதல்வர் நாற்காலிக் கனவில் மிதந்தபடி, இருக்கும் அதிமுக., ஆட்சியை கலைத்துவிட்டு, எப்படியாவது அமர்ந்துவிட வேண்டும் என்று பல குயுக்திகளைக் கையாண்டு வருகிறார்.
அதற்காகவே போராட்டங்கள் மூலம் தமிழகத்தில் கொதிநிலையை ஏற்படுத்தி வருகிறார். அடிக்கடி சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் நிலவரத்தை ஏற்படுத்த கலவரத்தைக் கையாண்டு வருகிறார். ஆயினும் முதல்வராக இருக்கும் எடப்பாடி எல்லாவற்றிலும் தப்பித்து வருகிறார். கிட்டத்தட்ட ஒரு டிவி., சீரியல் கதையைப்போல் மூன்றாண்டுகள் கடந்து விட்ட நிலையில், அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின்.
அதற்காகவே கைகொடுக்கும் வகையில் டிடிவி தினகரனும் ஸ்டாலினுடன் இணைந்து ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட முயன்று வருகிறார். இந்நிலையில், வரும் தேர்தலில் நிலைமை எப்படிப் போனாலும், தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியை ஆளும் தரப்பு மேற்கொண்டு வருகிறது. ஸ்டாலினும் தினகரனும் இவ்வாறு சதி வேலைகளில் ஈடுபடாமல் இருந்திருந்தால், எடப்பாடி தரப்பும் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது போன்ற செயல்களில் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்காது. மாறாக, ஆளும் தரப்புக்குக் கொடுக்கும் பரமபத விளையாட்டு நெருக்கடியால், அவர்களும் இந்த நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
திமுக., செய்வது நியாயம் என்றால், அதிமுக., செய்வதும் நியாயம்தான் என்று கூறும் அவர்கள், இதனால் பாதிக்கப்படப் போவது பொதுமக்களும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும்தான் என்கின்றனர்.
இதை அடுத்து, அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன் திமுக தரப்பு வழக்கறிஞர் இந்த மனுவை அளிக்க, அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வரும் திங்கள் கிழமை அவசர வழக்காக விசாரிக்க உறுதி கொடுத்துள்ளது.
சபரிமலை விவகாரத்திலோ, நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வு பூர்வ விவகாரங்களிலோ அவசர வழக்காக விசாரிக்க எடுத்துக் கொள்ளாத உச்ச நீதிமன்றம், கருணாநிதி சமாதி விவகாரத்திலும், திமுக.,வின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதிலும் அவசர வழக்கு விசாரணைக்கு உடனே தலையாட்டுவது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பொருமித் தள்ளுகின்றனர். உச்ச நீதிமன்றம் திமுக.,வின் கோரிக்கைகளுக்கு மட்டும் செவிசாய்த்து நடுநிலையுடன் நடந்து கொள்வதால், தனது மனுவில் நடுநிலை குறித்து குறிப்பிட்டுள்ளது திமுக.,!
தாங்கள் ஏற்கெனவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளதால், அதிமுக., மூன்று உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்க வேண்டும். சபாநாயகர் நடுநிலைமை தவறாமல் இருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் தனபால் கட்சி நிர்வாகி போல செயல்படுகிறார். நடுநிலை தவறிவிட்ட காரணத்தினால், மூன்று எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கும் எடுக்கும் தார்மீக கடமையை அவர் இழந்துவிட்டார் என்று திமுக தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.