ஸ்டாலினிடம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சமூக செயற்பாட்டாளரான நடிகை கஸ்தூரி! @KasthuriShankar
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் “மீண்டும் மோதி!” என்ற முழக்கத்தை முன்வைத்து, தேர்தலை சந்தித்தது பாஜக.,! கடந்த 5 வருடங்களில் மோதி மேற்கொண்ட திட்டங்கள் ஏராளம். வரிகளை கறாராக வசூலித்து, வரி ஏய்ப்பாளர்களை சரியாக கண்டறிந்து, அவற்றின் மூலம் நாட்டின் நிதி நிலையை உயர்த்தி, அந்த நிதியை ஏழைகளுக்கான நலத் திட்டங்களுக்கு அதிகம் பயன்படுத்திக் கொண்டார் என்று வட நாட்டு மக்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றனர்.
மோடியின் திட்டங்களில் இலவச கழிப்பறை கட்டும் திட்டத்தின் மூலம் பயன் அடைந்த கிராமப் பெண்கள் மோடிக்கு பெரும் நன்றியைத் தெரிவித்துள்ளனர். காரணம், கழிவறைகள் இல்லாமையால், பொது இடங்களில் அல்லது பொதுவெளியில் செல்லும் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் அவலம் கிராமப் புறங்களில் இருந்தது. இதனை நீக்குவதற்காகவும், பெண்கள் கவுரவமாக வாழ வேண்டும் என்பதற்காகவுமே ஸ்வச் பாரத் என்ற தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான கழிவறைகள் இலவசமாக கட்டிக் கொடுக்கப் பட்டன.
குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெகுதொலைவு நீர்க் குடங்களை சுமந்து சென்று, தண்ணீர் பிடித்து வீட்டுக்குக் கொண்டு வரும் பெரும் பணியை குடும்பத்தின் பெண்களே செய்து வந்தார்கள். அவர்களுக்கு இதனால் பல மணி நேரம் வீணாகிறது. உடல் வலியும் ஏற்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, நீர் வளத் திட்டங்களை செயல்படுத்தினார் மோதி. தொடர்ந்து தனது அடுத்த 5 ஆண்டு ஆட்சியில் நதி நீர் இணைப்பு, அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீர் வழங்குதல் இவற்றை நிறைவேற்றப் போவதாகக் கூறியிருந்தார்.
மோதியின் இத்தகைய திட்டங்கள் பெண்களை உளவியல் ரீதியாக வெகுவாகக் கவர்ந்தன. இதன் எதிரொலிப்புதான் இந்த முறை ஆண்களுக்குச் சமமாக பெண்களும் அதிக அளவில் வெளிவந்து வாக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில், பாஜக., வெற்றிக்கு ஹிந்தி பேசும் மாநிலங்களே காரணம் என்றும், தமிழகத்தில் அதற்கு வெற்றி கிட்டவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார் திமுக.,வின் ஸ்டாலின்.
இதற்கு தனது டிவிட்டர் பதிவில் பதில் கொடுத்திருக்கிறார் கஸ்தூரி. அதில்…
“இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல” – மு.க.ஸ்டாலின் … அட ஆமாம், கோவா குஜராத் கர்நாடகம் ஒடிஷா வடகிழக்கு காஷ்மீர் வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலங்கள் , ஏன், ஆந்திராவும் இந்தியாதான் ! இதை திரு ஸ்டாலின் தானாகவே மனமுவந்து சுட்டிக்காட்டுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை !
“இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல” – மு.க.ஸ்டாலின்
அட ஆமாம், கோவா குஜராத் கர்நாடகம் ஒடிஷா வடகிழக்கு காஷ்மீர் வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலங்கள் , ஏன், ஆந்திராவும் இந்தியாதான் ! இதை திரு ஸ்டாலின் தானாகவே மனமுவந்து சுட்டிக்காட்டுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை !— Kasturi Shankar (@KasthuriShankar) May 27, 2019