சூர்யாவின் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட பிரமாண்ட கட்அவுட் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருகே சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் இணைந்து 215 அடி பிரமாண்ட கட் அவுட் ஒன்றை வைத்தனர். இந்த கட் அவுட் நாளை திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு இன்று மாலை 4 மணி அளவில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட இருந்தது. சூர்யா ரசிகர் மன்றத் தலைவரான திருத்தணி எ.டி.ராஜ்குமார் என்பவர் இந்த கட் அவுட்டை 6.50 கோடி ரூபாய் செலவில் வைத்திருந்தார்.
சுமார் 40க்கும் மேற்பட்டோர் ஒரு மாதத்திற்கும் மேலாக உழைத்து இந்த கட் அவுட்டை உருவாக்கியிருந்தனர். இந்நிலையில் இந்த கட் அவுட்டுக்கு முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறி உடனடியாக அகற்றும்படி காவல்துறையினருக்கு உத்தரவிடப் பட்டது.
இதை அடுத்துஅனுமதியின்றி கட் அவுட் வைத்ததாக நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரி தலைமையில் ஊழியர்கள் கட் அவுட்டை அகற்றினர். இதனால் ரசிகர்கள் மன வேதனை அடைந்தனர்.


