தங்க தமிழ்ச்செல்வன் இன்று திமுக.,வில் சேர்ந்த நிலையில், பெரும் காயப் பட்ட மனத்துடன் கனத்த இதயத்துடன் காட்சிகளைக் கண்டு கொண்டிருக்கின்றனர் மு.க.அழகிரி ஆதரவாளர்கள்.
காரணம், மு.க.அழகிரி திமுக.,வில் செல்வாக்குடன் இருந்திருந்தால், தாங்களும் நல்ல செல்வாக்குடன் வலம் வரலாம் என்று காத்திருந்தனர். ஆனால், காலம்தான் கடந்து கொண்டிருக்கிறதே தவிர அதற்கான எந்த வெளிச்சக் கீற்றும் அவர்களின் கண்களுக்கு முன் படவே இல்லை.
தங்க தமிழ்ச்செல்வனை எல்லாம் கட்சியில சேர்த்துப்பாய்ங்களாம்… சொந்த சகோதரனை சேர்த்துக்க மாட்டாய்ங்களாம்… – என்று ப சச்சிதானந்தன் என்பவர் பேஸ்புக்கில் ஒரு கருத்துப் பதிவிட, அது அழகிரி பெயரிலான பேஸ்புக் பக்கத்தில் பகிரப் பட்டுள்ளது.
பொதுவாக அழகிரி பேஸ்புக், டிவிட்டர் என எதிலும் வருவதில்லை. ஆனால் அவரது பெயரில் அழகிரியின் தகவல்களைப் பகிர என்றே அவரது ஆதரவாளர்கள் ரொம்பவும் ஆக்டிவாக சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றனர்.
ஒரு காலத்தில் போஸ்டர் என்றாலும், சுவர் விளம்பரங்கள் என்றாலும், பேனர்கள் என்றாலும் அது மதுரைதான் என்று கெத்து காட்டி வந்தார்கள் அழகிரி ஆதரவாளர்கள். இதற்காக அவர்கள் பயன்படுத்தும் வாசகங்கள் எல்லாம் அதிரடி அதிர்வேட்டுகளாக, கவர்ச்சிகரமானவையாக இருக்கும். அந்த வாசகங்களுக்காகவே அந்த விளம்பரங்கள் பெரும் அளவில் மக்களிடம் பரப்பப் பட்டிருக்கும்.
தற்போது, அழகிரி எந்த வித முக்கியத்துவமும் இன்றி, வெளியுலகம் நினைத்துக் கூடப் பார்க்க எந்த செய்தியும் இன்றி அமைதியாக ஓர் ஓரத்தில் ஒதுங்கி இருந்து வருகிறார். அதே நேரம், திமுக., இப்போது ஆர்ப்பாட்டத்தில் திளைத்து வருகிறது.
மதுரைக்கு தெற்கே திமுக.,வில் அழகிரி வைத்ததுதான் சட்டம் என்று இருந்த நிலை மாறி இப்போது திமுக., பரவலாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், அழகிரியைச் சீண்டுவாரும் இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலையில்தான் தற்போது வரிசையாக திமுக.,வை திட்டித் தீர்த்து அரசியல் செய்து கொண்டிருந்த மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் திமுக.,வில் இணையும் போது, அண்ணன் அழகிரிக்கு மட்டும் இடமில்லையா என்று உள்ளக் குமுறலை வெளியிடுகின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.
அதன் வெளிப்பாடாகவே, சமூக வலைத்தளங்களில் தற்போது, தங்க தமிழ்ச்செல்வனை எல்லாம் சேர்த்துப்பானுங்களாம்…சொந்த அண்ணனை மட்டும் சேர்த்துக்க மாட்டாய்ங்களாம் என்ற ஏமாற்றத்தை வெளிப்படுத்தி கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்!