இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையின் வாசலிலேயே ஆடுவெட்டி, சமைத்து உண்டு இறைச்சிக் கழிவுகளைப் போட்டுச் செல்கிறார்கள் என்று கோயில் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதற்காக, #திருக்குற்றாலம் குற்றாலநாதர் ஆலய பணியாளர்கள் பணிநீக்கம் #செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சிவபெருமானின் ஐந்து நாட்டிய சபைகளில், நெல்லை மாவட்டத்தில் இரண்டு சபைகள் உள்ளன. தாமிர சபை என புகழ்பெற்ற நெல்லையும், சித்திரசபை என புகழ்பெற்ற திருக்குற்றாலமும் பாடல் பெற்ற தலங்கள். திருக்குற்றாலம் சித்திரசபையில் நடராஜப் பெருமான் சித்திர ரூபமாகத் திகழ்வதாக நம்பிக்கை. எனவே இந்த சித்திர சபையை மிகவும் சிரத்தை எடுத்து, புதுப்பித்து, தற்போது அங்குள்ள ஓவியங்கள் சிதிலமடையாமல் பாதுகாத்து வருகிறார்கள்.
திருக்குற்றாலநாதர் கோயிலைச் சார்ந்து, வடபுறத்தில் தெப்பக்குளத்தை அடுத்து தனியாக பிரமாண்டமாக அமைந்துள்ளது சித்திரசபை. முக்கிய விழாக்கள் நடைபெறும் ஆலயம். ஆருத்ரா தரிசன தாண்டவம் இங்கே சிறப்பு! இத்தகைய ஆன்மிகப் பெருமை பெற்ற இடத்தில் ஆடு வெட்டி சமைத்து உண்டதற்கு ஆலய அன்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறிய போது… “இந்து சமய அறநிலையத்துறையே! திருக்குற்றாலம் கோயிலில் நிர்வாகமே! திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் திருக்குற்றாலம்! இங்கு ஆடு வெட்டி அதுவும் ரதவீதியில் பலியிட்டு அதே இடத்தில் சமைத்து சாப்பிடுவது, பக்தர்கள் மனத்தை புண் படுத்துகிறது. இதை எப்படி இந்து சமய அறநிலையத்துறை திருக்குற்றாலம் கோயில் நிர்வாகம் அனுமதித்தது?!
தமிழகத்தில் ஐந்து சபையில் ஒன்றான சித்திரை சபை வாசலில் இப்படி ஆடு பலியிட்டு சமையல் செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது!இதை அனுமதித்த திருக்குற்றாலம் குற்றாலநாதர் ஆலய நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று திருக்கோயில் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
தென்காசி இளைய பாரதம், வெங்கடேஷ் இது குறித்து கூறியபோது, இந்தியாவிலேயே புகழ் பெற்ற சிவாலயங்களில் குற்றாலநாதர் கோவில் ஒன்று. ஆனால் இன்று அழிவின் விழிம்பில் இருந்து வருகிறது இந்த திருக்கோவில் வளாகம். சிவபெருமான் ஆடிய திருத்தலங்களில் பஞ்சபூதத்தலங்களில் இந்த குற்றாலநாதர் திருக்கோவிலில் சார்பு கோவில் தான் சித்திர சபை ஒன்று. பல மூலிகையில் வண்ணங்களால் உருவாக்கப்பட்ட இந்த கோவிலில் ஓவியம் புகழ்பெற்றது ஒன்றாகும். கோவில் வளாகத்தில் மட்டன் சிக்கன் உணவு வகைகளை தயாரிப்பது முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதி . ஆனால் திருக்கோவில் நிர்வாகத்தில் கோவிலில் பணி புரியும் ஊழியர்களுடன் அனுமதியோடு திருக்கோவில் வளாகத்தில் உணவு சமைப்பதற்கு பணம் வாங்கிக் கொண்டு அங்கே வளாகத்தில் உணவு சமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இது மிகப்பெரிய கண்டிக்கக் கூடிய செயலாகும் . கோவில் வளாகத்தில் கார் பார்க்கிங் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா செயல்படுகிறதா இல்லையா?. அங்கு மாமிச உணவுகள் தயாரிப்பதற்கும் அனுமதியளித்த ஊழியர்கள் மீது நடவடிக்கை தேவை. கோவில் வளாகங்கள் முழு பகுதிகளும் அசுத்தமாக காட்சியளிக்கிறது குப்பை கூடாரமாக காட்சியளிக்கிறது. அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதை உடனடியாக குற்றாலம் அறநிலை துறை செயலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். – என்றார்.