இலை வடாம்
தேவையான பொருள்கள் :
பச்சரிசி – 250 கிராம்,
புழுங்கல் அரிசி – 250 கிராம்,
சீரகம் -5 கிராம்,
ஓமம்- 5 கிராம்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
பச்சிரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் கொட்டி நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு ஊறிய அரிசி இரண்டையும் சேர்த்து வெண்ணெய் பதத்திற்கு அரைத்தெடுத்து உப்பு சேர்த்து வைத்து விடவும். மறுநாள் காலை அந்த மாவில் சிறிதளவு நீர் விட்டு ஓமம், சீரகம் சேர்த்து துண்டு செய்யப்பட்ட வாழை இலையில் ஒரு கரண்டியில் எடுத்து தோசை போன்று மெலிதாக வட்ட வடிவில் இட்டுக் கொள்ள வேண்டும். தோசை போன்று இடப்பட்டதை இட்லிப் பாத்திரத்தில் நீர் ஊற்றி இட்லித் தட்டைக் கவிழ்த்துப் போட்டு வாழை இலையில் இடப்பட்ட மாவை வைத்து முடி போட்டு மூடிவிட வேண்டும். ஒவ்வொன்றாக இப்படி தோசை போன்று இடப்பட்டதை ஆவியில் வேகவைத்து எடுத்து விட வேண்டும்.
பிறகு இலையில் இருந்து அப்பளத்தை பிரித்து எடுத்து நிழலில் முதலில் காயவைத்து எடுக்க வேண்டும். ஒன்றோடொன்று ஒட்டாமல் பார்த்துக் காயவைக்க வேண்டும். அடுத்த நாள் வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும். மூன்று நாள் வெயிலில் காயவைத்தால் போதும்.
பி.கு : இலை வடாம் வேகவைக்க தட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இதனையும் வாங்கி உபயோகிக்கலாம்.