லக்னௌ: 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தியதால், இந்திய அணி 195 ரன்கள் குவித்தது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோவில் எகனா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களம் இறங்கினர்.
துவக்கத்தில் இந்த ஜோடி நிதானமாக ரன்களை சேகரித்து படிப்படியாக வேகத்தை அதிகரித்தது. குறிப்பாக ரோகித் சர்மாவின் ஆட்டத்தின் அனல் பறந்தது. அவருடைய பேட்டில் பட்ட பந்துகள் நாலாபுறமும் சிதறின. பவுண்டரிகளும் சிக்சரும் ரோகித் சர்மா விளாசித்தள்ளினார். மறுமுனையில், ஷிகர் தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார். இதனால், விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 100 ரன்களை கடந்தது. 13.6 ஓவர்களில் 123 ரன்களை இந்திய அணி எட்டியிருந்த போது, ஷிகர் தவான் 43 ரன்களில் (41 பந்துகள்) வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய இளம் வீரர் ரிஷாப் பண்ட் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஆனால், மறு முனையில், சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்து ரசிகர்களுக்கு, ரோகித் சர்மா தீபாவளி விருந்து படைத்தார். அவருக்கு பக்க பலமாக ராகுலும் விளையாடினார். அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா, கடைசி ஓவரில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் 4-வது சதம் இதுவாகும்.
இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 61 பந்துகளில் 111 ரன்களுடம், லோகேஷ் ராகுல் 16 பந்துகளில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.