உள்ளொன்று வைக்காத உத்தமன் – இன்றும் ஊர்போற்றும் மக்களின் காதலன் ! சுள்ளென்று பேசாத சுந்தரன் – தீய சூழ்ச்சிகள் இல்லாத சோதரன் ! அள்ளென்று சொல்கின்ற தர்மவான் – பகை அழுக்கினை நீக்குகிற புண்யவான் ! புள்ளினைத் தந்தையாய்ப் போற்றினான் – குகப் புதையலை நண்பனாய்க் கூட்டினான் ! (8) தீதினை நன்மையாய்ச் செய்தவன் – வந்த திதியையும் தன்னாலே வென்றவன் மாதினைப் போற்றுகிற மானுடன் – வேறு மாதினைக் கொள்ளாத நெஞ்சினன் ஓதிய வார்த்தைக்காய் வாழ்ந்தவன் – ஊர் ஊதிய வார்த்தைக்கும் தாழ்ந்தவன் வேதியர் சொல்லினையும் கேட்டவன் – ஒரு வேடுவனின் பாடுபொரு ளானவன் ! (16) மானுட சாதியில் வந்தவன் – மக்கள் மண்ணிலே உற்றதுய ருற்றவன் மானுடன் மாயையில் ஓடினான் – பெண் மானுடச் சாயையில் வாடினான் ! ஊனுடல் வற்றிடத் தேடினான் – லங்கை ஊரிலே வெற்றியும் கூடினான் ! வானுயர் மாருதி நட்பினான் – நம் மனதிலே ராமனாய் அப்பினான் ! (24)
- கவிஞர் மீ.விசுவநாதன்
(28.03.2015 சனிக்கிழமை ஸ்ரீராம நவமி)