கல்லெறிந்த காதல்!

Published:

rose1 நலம் தரும் நவராத்திரியாம்! பெண்மை போற்றும் வழிபாடாம்! உலகம் கொண்டாடுகிறது… பர தேவதையாய் பாருக்குத் தெரியும் அன்னையை உலகம் பூசித்துப் போற்றுகிறது..! அவள்… அசுரனை அழித்த அன்னை! நீயோ என் அகங்காரம் அழித்த பெண்மை! ரம்மியமாய் எனக்குத் தெரிந்த ரம்யா! பாருக்குத் தெரியாத நீ என் அழகு தேவதை! என்னுள் உயிர்ப்புடன் உலவும் என் எண்ண தேவதை! உயிர் கொண்ட ஓவியம் நீ! நான்… குழந்தையாய் மாறிய போதெல்லாம் குலவையிட்டுத் தேற்றிய அன்னையாய் நீ திகழ்ந்தாய்! உன்னை… ஒன்பது நாட்களுக்கு மட்டும் உள்ளத்தில் அடைத்து வைத்து பூசிக்க விரும்பவில்லை! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உன்னையே போற்றி வந்தேன்! சக்தி சேராத சிவம் சவமாய்க் கிடக்குமென சாத்திரங்கள் சொல்லும்! உமையொருபாகம் கொண்டு உலகுக்கு நலம் செய்வான் பரமன்! என் உடலுள் புகுந்த உயிராய் நீயும் இருப்பதால்… உலகத்தே நானும் உலவுகின்றேன்! உறவெனக் கூடிக் குலவுகின்றேன்! ஆனால் அண்மைக் காலமாய்… நீ என்னில் பர தேவதையாய்த் தெரிகிறாய்! மனத்தில் பார தேவதையாய்த் தெரிகிறாய்! வசைச்சொல் கற்களை எறிந்துவிட்டுப் போனாய்! இசைவாயிருந்த உள்ளம் எரிந்துபட்டுக் கிடக்கிறது! இப்போது… கல்எறிந்த காதலாய் நீ! எரிகல் தாக்குண்ட கிரகமாய் நான்!

Related articles

Recent articles

spot_img