நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதிய ஏசி., பஸ் இன்று முதல் தொடங்கப் பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அரசு விரைவுப் பேருந்து போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து இன்று முதல் சென்னைக்கு புதிய படுக்கை வசதி கொண்ட ஏசி., பஸ் இன்று தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய பேருந்துகளை சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். அவற்றில் படுக்கை வசதியுடன் கூடிய ஏசி பஸ், செங்கோட்டை – சென்னை வழித்தடத்தில் இயக்கப் படுகிறது.
இந்த பஸ்ஸில் 15 படுக்கைகளும், 32 இருக்கைகளும் உள்ளன. சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு இந்த பஸ்ஸில் படுக்கை வசதிக்கு ரூ.1200ம், இருக்கைக்கு ரூ.840ம் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சுதந்திர தினமான வியாழன் இன்று மாலை 5.30க்கு செங்கோட்டையில் இந்த பஸ் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. இதற்கு பயணிகள் பெரிதும் வரவேற்பு தெரிவித்தனர்.
ஏற்கெனவே புதிய பஸ்களை எஸ்.இ.டி.சி., செங்கோட்டை -சென்னைக்கு இயக்குகிறது. ஆனால் அவை அனைத்தும் சொகுசு ரக இருக்கை வசதி கொண்ட பஸ்களே. இந்நிலையில் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலம் அருகில் இருப்பதால் இத்தகைய வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப் பட வேண்டும் என்ற இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேற்றப் பட்டுள்ளது.