
தனியார் பள்ளி முதல்வர் காரை தாறுமாறாக ஓட்டி வந்த சம்பவமானது நேற்று மாலை சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் உள்ள மிகவும் முக்கியமான சாலைகளில் அடையாரில் உள்ள கிரீன்வேஸ் சாலையும் ஒன்று. இந்த சாலையில் நேற்று மாலை ஒரு கார் அதிவேகத்தில் விரைந்து சென்று கொண்டிருந்தது. பின்னர் அந்த கார் குமாரசாமி சாலைக்குள் அதிகமான வேகத்துடன் நுழைந்தது.
இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பலத்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கார் வேகத்தை குறைக்காமல் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அந்தக்காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீதும் கார் மோதியுள்ளது.
சம்பவம் அறிந்த காவல்துறையினர் குமாரசாமி சாலைக்கு விரைந்து வந்தனர். காவல்த்துறையினர் விசாரணை நடத்தியதில் பிரபல தனியார் பள்ளியின் முதல்வரான ஓமன் தாமஸ் என்பவர் காரை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த காய்கறி வியாபாரியாக முருகன் என்பவரும் அவருடைய மகனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. 3 பேரையும் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வான வாலாஜாபாத் கணேசனின் காரும் இந்த விபத்தில் சிக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் அந்த காரிலில்லை.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அடையாறு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அடையாறில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.