நீட் தேர்வு மோசடிகளால் இப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, கல்வியின் தரத்தைப் பேணுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் போது, முறைகேடுகள் மூலம் இடங்களைப் பெறுவதில் முன்னணியில் நிற்கின்றனர் சிலர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் மூலம் எழுதி சேர்க்கை நடைபெற்ற விவகாரத்தால், 2017 மற்றும் 2018 மருத்துவ மாணவர் சேர்க்கையும் சோதனைக்குள்ளாகிறது. எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதாசேஷய்யன் இதனை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்திருக்குமா என்பது குறித்து மருத்துக் கல்வி இயக்குநர் அலுவலகத்துடன் ஆலோசிப்போம் என்று கூறிய சுதா சேஷய்யன், நவம்பர், டிசம்பரில் மாணவர்கள் விவரங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, நீட் தேர்வில், உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்ததை அவரது தந்தை வெங்கடேசன் ஒப்புக் கொண்டுள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், ஆள்மாறாட்டம் செய்ய, உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் கைமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இடைத்தரகர்கள் குறித்து விவரம் கிடைத்துள்ளதால் அது குறித்து விசாரிக்க மும்பை செல்ல முடிவெடுத்துள்ளது சிபிசிஐடி.