சென்னை:
சென்னையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் சொல்லி போலீஸார் கெஞ்சிக் கொண்டிருந்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால், அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் ஆத்திரமுற்ற ஒரு கும்பல் ஐஸ்ஹவுஸ், மற்றும் நடேசன் சலை பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
போலீஸார் மீது கல், மணல் வீச்சு:
மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களை விரட்ட வந்த போலீசார் மீது மணல் மற்றும் செருப்புகளை வீசித் தாக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கையில் லத்தி எதுவும் இன்றி வெறுமனே கைகளால் பிடித்து இழுத்து அப்புறப்படுத்தியபோதும் அவர்களில் ஒரு தரப்பினர் கடல் பகுதிக்குச் சென்று போலீஸாரை மிரட்டினர். அவர்களுக்கு ஆதரவாக மீனவர்களும் கைகோத்தனர். இந்நிலையில், கடற்கரையை நோக்கி வந்த மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். கடற்கரை பகுதியில் தங்களை நெருங்கி வந்த போலீசார் மீது போராட்டக்காரர்கள் மணல் மற்றும் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
மெரினா சாலைகள் மூடல்:
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை விரட்டியடித்து வரும் போலீஸார் மெரினா கடற்கரைக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் மூடி சீல்வைத்தனர். அங்கே போக்குவரத்து தடுக்கப்பட்டது. இதை அடுத்து, மெரினா கடற்கரையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட இளைஞர்கள் ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள சாலைகளில் குவிந்தனர். அவர்கள் மீண்டும் கடற்கரைப் பகுதிக்கு செல்லாமல் இருக்க போலீசார் அனைத்து சாலைகளையும் மூடினர். கடற்கரைச் சாலையுடன் இணையும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் போக்குவரத்து நிறுத்தம்
மேலும், ரயில் வழியாக மெரினாவருபவர்களைத் தடுக்க, வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் பறக்கும் ரயில் போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வன்முறை வெறியாட்டம்:
சென்னை திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர். இதனால்அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் 5 முறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஐந்து போலீசார் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது. குறிப்பாக அவ்வை சண்முகம் சாலை, கடற்கரைச் சாலை இணைப்பு பகுதியில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால், அவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
காரணம் யார்; போலீஸார் விளக்கம்:
இந்நிலையில், போராட்டக் காரர்கள் போலீஸார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில், போலீஸ் ஆய்வாளர் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தக் கல்வீச்சு, கலவரத்துக்கு மாணவர்கள் காரணம் இல்லை என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத சக்திகளே இதற்குக் காரணம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
தடியடியை நிறுத்த கோரிக்கை:
சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் கலைந்து செல்ல அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன் இன்று காலை விசாரணைக்கு வந்தது. தடியடி நடத்துவதை நிறுத்த வேண்டும்; காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஆதாரங்கள் இல்லாமல், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என கூறியது. இதையடுத்து, வழக்கறிஞர் சங்கர்சுப்பு தனி நீதிபதி மகாதேவன் முன் இப்பிரச்னையை கொண்டு சென்றார். இந்த விவகாரத்தை அவசர வழக்காக ஏற்று, மதியம் 2.15க்கு விசாரிக்க நீதிபதி ஒப்புக்கொண்டார்
மதுரையில் வன்முறை:
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வருபவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். அங்கு பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம கமிட்டி முடிவு எடுத்தது குறித்து போராட்டக்காரர்களிடம் விவரம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க போராட்டக்காரர்கள் மறுத்தனர். இதை அடுத்து, போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு போலீசார் மீது அவர்கள் கற்களை வீசித் தாக்கினர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் நடத்துபவர்களுக்கு போலீசார் இறுதி எச்சரிக்கை விடுத்தனர். 10 மணிக்குள் கலைந்து செல்லாவிட்டால், நீங்கள் கலைக்கப்படுவீர்கள் என எச்சரித்தனர். இருப்பினும் அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அங்கே பெண்கள் அதிக அளவில் கூடியிருந்ததால் போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் சில இடங்களில் எல்லை மீறல்கள் இருந்ததால், போலீசார் தடியடி நடத்தினர்.