தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1900ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்படைந்த பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், மக்கள் கூட்டம் அதிகமாக கூடக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட உடன், காய்கறிகளை வாங்கி சேமித்துக் கொள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும், இன்னும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். சென்னை மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.