
— சாந்தி ஸ்ரீ தூளிபுடி பண்டிட் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
பொதுவாக சமூக மாற்றத்தின் வரலாறு இயக்கங்களை முன்னெடுத்தவர்களின் வாழ்க்கையோடு இணைந்து, அதன் மூலம் கிடைக்கும் அதிகார பீடத்தில் அமர்ந்து எழுதப்படுகிறது. இது புரிந்து கொள்ளக் கூடியதே. அதேவேளையில் இது சில வரம்புகளையும் கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த வரலாற்றை உருவாக்கியவர்களின் வாழ்க்கை சூழ்நிலையை விவரித்தால் அது நீண்டதாகிவிடும் என்பதால் தவிர்த்து விடுகின்றனர்.
சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவரான பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அப்படிப்பட்ட ஒன்று. அவரது அரசியல், அறிவார்ந்த பங்களிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ளன. அவை முக்கியமானவை , மையமானவைதான். அவரது பங்களிப்பை தொடர்ந்து, நீட்டித்து செய்வதற்காக பங்காற்றியவர்களின் வாழ்க்கையை பற்றி மிகக் குறைவாகவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ரமாபாய் அம்பேத்கர், சவிதா அம்பேத்கரின் வாழ்க்கையை கூர்ந்து நோக்குவது பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய சமூக மாற்றத்தின் வரலாற்று உண்மையில் எப்படி வாழ்ந்து, முன்னோக்கி வளர்த்தெடுக்கப்பட்டது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள தேவையானது.
ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார். சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்து பம்பாய்க்கு போக வேண்டி இருந்தது. அங்கு வாழ்வதற்கே சிரமப்பட வேண்டியிருந்தது. பல சமரசங்களை செய்ய வேண்டியிருந்தது. அங்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. எந்த அமைப்பும் அவருக்கு ஆதரவு கரம் நீட்டவில்லை. முன்னேற வழி இல்லாமல் இருந்தது. 1906 இல் அவருக்கு அம்பேத்கருடன் திருமணம் நடந்தது. அத்துடன் குடும்ப பொறுப்பும் வந்தது. அந்த குடும்பமோ பல ஆண்டுகள் பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்தது.
திருமணத்துக்குப் பிறகு நிலையான, உறுதியான சூழ்நிலை ஏற்படுவதற்கு மாறாக நிலையற்ற நிலையே நீடித்தது. அம்பேத்கர் மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்ற போது ரமாபாய் பம்பாயிலேயே இருந்தார். கடுமையான நெருக்கடியில் வீட்டுச் சூழல் இருந்தது. நிதி ஆதாரம் பலவீனமாகவும் நிச்சயமற்றும் இருந்தது. உளரீதியான அழுத்தமும் அதற்கு இணையாக இருந்தது. அவருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் நான்கு இறந்து விட்டன. இது அவரது தனிப்பட்ட துயரத்தை மட்டும் காட்டவில்லை, பலவீனமான சூழலையும் காட்டுகிறது. அவ்வப்போது வந்த கஷ்டங்கள் அல்ல தொடர்ச்சியாக நிலவிய அழுத்தம் அவரது தினசரி வாழ்க்கையை தீர்மானித்தது.
இதனால் ரமாபாயின் பங்களிப்பை வழக்கமான ஆதரவு நிலையோடு ஒப்பிட முடியாது. இடையூறு அல்லது குறுக்கீடு எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் நிலையில் அவர் சூழ்நிலையை தொடர்ந்து ஒரே மாதிரியாக வைத்திருந்தார். குறைவான பண வரவில் குடும்பத்தை நடத்துவது, மீண்டும் மீண்டும் வரும் அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்வது எல்லாம் கடுமையான கட்டுப்பாட்டையும் நீண்ட கால கண்ணோட்டத்துடன் பொறுமையாக அவற்றை தாண்டி தொடர்வதை அவரது பண்பாக்கியது. பாபா சாகேப்பின் கல்வியின் தேவையைப் பற்றி அவருக்கு விரிவான புரிதல் இருந்ததை அவர் வாழ்க்கையில் பார்க்கிறோம். அம்பேத்கர் அவருடன் இல்லாததை பற்றி கேட்கும் போதெல்லாம் அது தேவை என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி கூறியுள்ளார். அன்றாட குடும்ப விவகாரங்களை விட மேலானது அவரது அறிவார்ந்த பணி என்ற புரிதல் அவருக்கு இருந்தது.
எதிர்கால கண்ணோட்டத்தோடு பணி புரிவது என்பது கல்வி கற்றல் மூலமாக வராமல் அனுபவத்தினால் அவருக்கு ஏற்பட்டது. பலவீனமான சூழ்நிலையில் சிதறி விடாமல் தொடர்ந்து தக்க வைத்திருந்த அவரது திறன், அவரது பங்களிப்பை பொருள் மீக்கதாக்குகிறது. இந்த வகையான உழைப்பு, பங்களிப்பு அரிதாகவே பொருட்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது பாட நூல்களின் இல்லை. அமைப்புகளால் சொல்லிக் கொடுக்கப்படவில்லை. ஆனால் இதை புறம் தள்ள முடியாது. இது போன்ற தொடர்ச்சியான ஆதரவு இல்லை என்றால் நீண்ட கால அறிவார்ந்த செயல்பாடுகளை செய்வது கடினம். பொறுமையுடன் கஷ்டங்களை தாங்கி கொள்ளுதல், ஒருங்கிணைத்தல், எதிர்கால நோக்கம் பற்றிய தெளிவு ஆகியவற்றை ரமாபாயின் வாழ்க்கை வெளிப்படுத்துகிறது. இவை வரலாற்று ரீதியான மிகப்பெரிய சாதனைகளுக்கு ஏதுவாக அமைந்தன என்றால் அது மிகையல்ல.
சவிதா அம்பேத்கரின் பாதையோ முற்றிலும் வேறான சமூக சூழலில் நடை போட்டு அதே சமூக வரலாற்றில் முக்கியமான சந்திப்பில் இடையிட்டு சிறப்பானதொரு பங்களிப்பை ஆற்றியது. அவர் 1909 இல் படித்த, முற்போக்கான மனப்பான்மை கொண்ட குடும்பத்தில் பிறந்தார். பெண்களுக்கு கல்வியறிவு குறைவாக இருந்த அந்த காலத்திலேயே அவர் உயர்கல்வி பெற்றார். மருத்துவரான அவர் பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையில் 1940 ல் இணைகிறார். அப்போது அம்பேத்கரின் செயல்பாடுகள் தீவிரமாகவும் ஓய்விற்கு நேரம் இல்லாமலும் இருந்தன. அது அவரது உடல் நிலையை பாதித்தது.
பாபா சாகேப்பின் அறிபார்ந்த வெளிப்பாடுகளும் அவரது உடல் ஆரோக்கியமும் அப்போது இக்கட்டான சூழ்நிலையில் இருந்தன. நீரிழிவு, மன அழுத்தம் உட்பட பல நீண்ட கால நோய்களால் அவர் எதிர்பார்த்தபடி முழுமையாகவும் தொடர்ந்தும் செயல்பட முடியாத நிலையில் இருந்தார். இந்த சூழலில் தான் சவிதாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.
அவரது இணைவு ஆரோக்கியத்தை பராமரித்தல் என்ற பொதுவான எல்லைக்கும் மேலாக இருந்து. சீரான உணவு, உரிய மருந்துகள், தினசரி வழமைகளை உறுதியாக பின்பற்ற வைப்பது என்று திட்டமிட்ட நிர்வாகத்தை அம்பேத்கரின் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினார். அத்துடன் டாக்டர் அம்பேத்கரின் அறிவார்ந்த சக பயணியாகவும் அவரது பிற்கால எழுத்துக்களை ஆரம்ப நிலையிலே படித்து கருத்திட்டு, மேம்படுத்தினார். அவரது கல்வித் தகுதியானது டாக்டர் அம்பேத்கரின் ஆய்வு பணிகளை ஒருங்கிணைக்கவும், ஆய்வேடுகளை பிழையின்றி செப்பனிடவும், அவரது படைப்புகள் இறுதி வடிவம் பெறும் போது அவரது கூட்டாளியாகவும் ஆக்கின. இந்த வகையில் டாக்டர் அம்பேத்கரின் பணி தொடர்ந்து நடைபெறுவதற்கு சவிதாவின் பங்களிப்பு நேரடியாகவும் முக்கியமானதாகவும் இருந்தன.
டாக்டர் அம்பேத்கரின் உடல் ஆரோக்கியத்தை முடிந்த வரை நல்ல நிலையில் பராமரித்தார். சிந்திப்பது, எழுதுவது, அரசியல் செயல்பாடுகள் என்று மிகவும் உழைப்பை கோரும் நிலையிலும் அவரது ஆரோக்கியத்தை பாதுகாத்தார். அவரது வாழ்க்கையின் இறுதி காலத்தில் புத்த சமய தத்துவம் குறித்தும், அவரது பிரதான படைப்புகளையும் எழுதினார். சவிதாவின் பங்களிப்பு அவரது அறிவார்ந்த செயல்பாடுகளை, எழுத்துக்களை முழுமை பெற உதவின என்ற வகையில் புரிந்து கொள்ள வேண்டும்.
1956 இல் டாக்டர் அம்பேத்கர் புத்த சமயம் தழுவிய போது அவருடன் சவிதா இருந்தார் . இது அவருடைய சமூக, கருத்தியல் ரீதியான ஈடுபாட்டை வெளிப்படுத்தியது. அம்பேத்கரின் மரணத்துக்கு பிறகு சவிதாவின் பங்களிப்பு சரியாக அங்கீகரிக்கப்படவில்லை. சந்தேகத்துடன் பார்க்கப்பட்டு அம்பேத்கர் இயக்கத்தில் தள்ளி வைக்கப்பட்டார். இத்தனைக்கும் அம்பேத்கரின் எழுத்து, அறிவு பணியில் அவர் முக்கிய பங்காற்றியது தெரிந்த நிலையில் நடந்தன. பின்னர் ஏற்படுத்தப்பட்ட விசாரணை குழு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களிலிருந்து அவரை விடுவித்தது. ஆனாலும் சமூக அங்கீகாரம் உடனடியாக கிடைக்கவில்லை. அவர் எந்த வரலாற்றை நிலை பெற உதவினாரோ அந்த வரலாற்றின் விளிம்புகளில் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டார்.
ரமாபாய், சவிதாவை பற்றி ஒருங்கே படிக்கும் போது சமூக மாற்றத்துக்கு பெண்களின் பங்களிப்பை பற்றிய சீரிய புரிதல் ஏற்படுகிறது. அவர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியானவை அல்ல. ரமாபாய் ஏழ்மையில் வாழ்ந்தார் . கல்வியறிவு பெற முடியாத சூழ்நிலையில் இருந்தார் . சவிதா முற்றிலும் வேறான சூழலில் இருந்து வந்தவர். அறிவார்ந்த இணையாக, மருத்துவ அறிவுடன் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பவராக, தேர்ந்த அறிவுடன் தெளிவான அணுகுமுறை கொண்டிருந்தார் . வேறுபாடுகள் வெளிப்படையாக தெரியும்படி இருந்தபோதிலும் இருவரும் அம்பேத்கரின் பணியில், அதன் தொடர்ச்சியில், முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
இது, இவர்களது பங்களிப்பை பற்றிய வரையறையை, அங்கீகாரத்தை மறு வரையறை செய்ய கோருகின்றன. வெளிப்படையாக தெரிந்த, எழுதப்பட்ட, முறையான அதிகாரத்துடன் வந்தவை மட்டுமே வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுத்திவை என்றில்லாமல் இவர்கள் போன்றவர்களின் பங்களிப்பும் வரலாற்றை நிகழ்த்தியுள்ளன. தொடர்ச்சியை தக்க வைப்பது, கஷ்டங்களை, சிரமங்களை திறம்பட எதிர்கொண்டு நிர்வாகிப்பது ஆகியவை நீண்ட கால நோக்குடன் பணி செய்ய உதவுபவை, முக்கியமானவை என்றாலும் அவையின் உரிய கவனமும் அங்கீகாரமும் பெறுவதில்லை. ரமாபாயின், சவிதாவின் வாழ்க்கைகள், இதுபோன்ற உழைப்புகள் எதிர்பாராமல் நிகழ்ந்தவையோ, இரண்டாம் பட்சமானவையோ அல்ல.
இவர்களது வாழ்க்கை வரலாறு திறந்த மனதுடன் அணுக வேண்டியவை . தனிப்பட்ட விவரிப்புகள், சமூக நினைவு, சமூக அறிவு ஆகியவற்றை அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் பதிவாவதில்லை. இந்திய அறிவு மரபு இந்த விஷயத்தில் உதவிகரமான வரையறையை முன் வைக்கிறது. அது வாழ்க்கை அனுபவங்களையும் அது தொடர்பான உழைப்பையும் உணர்வுகளையும் உண்மையான ஆதாரமாகக் கொண்டு புரிந்து கொள்ள முனைகிறது. இது வரலாற்றை நூல்கள் , அமைப்புகள் மூலம் மட்டுமின்றி வாழ்க்கை, அதன் மீது ஏற்பட்ட அழுத்தங்கள், தாக்கங்கள். காலவோட்டத்தை மீறி நின்ற அதன் நோக்கம் ஆகியவற்றின் மூலமாக தெரிந்து கொள்ள செய்கிறது.
ரமாபாய் , சவிதாவை முன் வைப்பது பாபா சாகேப் அம்பேத்கரின் ஆளுமையை, மரபை குறைப்பதாகாது. மாறாக அவரை முழுமையாக புரிந்து கொள்ள உதவுபவை. இரு பெண்மணிகளின் வாழ்க்கையும் அம்பேத்கர் வாழ்க்கையின் நீட்சி அல்ல. இருவரது வாழ்க்கையும் தனித்துவமானவை. அவர்கள் பிறந்து வாழ்ந்த சூழ்நிலையில் உருவானவை . அவர்கள் செய்த முடிவுகளாலும் அவர்களது வலிமையினாலும் வடிவம் பெற்றவை. அதேவேளையில், இது போன்ற உழைப்பை, பங்களிப்பை கோரும் பெரிய வரலாற்று நிகழ்வுடன் ஆழமாக பிணைந்தவை.
எனவே, சமூக மாற்றமானது வெளிப்படையாக தெரிந்த, முறையாக பதிவு செய்யப் பட்டவற்றிக்கும் மேலான அம்சங்களை தெரிந்து கொள்ளும் போது மட்டுமே முழுமை பெறுகிறது. அமைதியாக, இடையறாமல் தொடர்ந்து செய்யப்பட்ட பணிகள் அங்கீகரிக்க படாமல் போகக் கூடாது. அந்த வகையில் ரமாபாய் , சவிதா அம்பேத்கர் இருவரும் வரலாற்றின் விளிம்பில் நிற்கவில்லை. விளிம்பிலிருந்து விலகி மையத்தில் உறுதியாக நிலை பெற்றுள்ளார்கள்.
நன்றி: சண்டே கார்டியன்
கட்டுரையாளர் தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.



