
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, நடுவே சென்று அவர்களது சண்டையை விலக்கி விட்டால், ஒரு நண்பர் நமக்குக் கிடைப்பார். அதே நேரம் நமக்கு நன்கு அறிமுகமான இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அவர்களை விலக்கி விட முயன்றால், அந்த இருவரில் ஒருவர் நமக்கு எதிரி ஆவார் என்பது அந்தப் பழமொழியின் சாரம்.
பாரதம் இந்தப் பழமொழியின் உள் அர்த்தத்தை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பதால்தான் ஈரான் இஸ்ரேல்/அமெரிக்கா நடுவே நடக்கும் சண்டையை தீர்ப்பதற்கு, பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று தானாக முன்வரவில்லை. காரணம் ஈரானும் இஸ்ரேல் தரப்பும் நமக்கு நட்பு நாடுகளாகவே இருக்கின்றன. சமரசம் என்று பேச வரும் போது ஏதாவது ஒரு தரப்புக்கு அவர்கள் நிலையில் இருந்து சற்று பின் வாங்கி பாதகமாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அது அந்த நட்புறவை கட்டாயப்படுத்தி இணங்கச் செய்வதாகவே முடியும். அதனால் ஏற்படும் காயம் உள்ளுக்குள் விரோதமாக வளர்ந்து நட்புறவை முறிக்கவும் செய்யும்.
தன் நாட்டு நலனை விரும்பும் ஒரு தலைவன், இரு தரப்புக்கும் நடுவில் அறிவுரை சொல்வதோடு நிறுத்திக் கொள்வான். அதைத்தான் பிரதமர் மோடி செய்திருக்கிறார்! அந்த அளவில் அவருடைய செயல்பாடு பெரிதும் பாராட்டுக்கு உரியதே!
இங்கே பாகிஸ்தானின் செயல்பாட்டை நாம் பார்க்க வேண்டும்.
அமெரிக்காவின் அடிமையாக, அமெரிக்கா சொல்வதைச் செய்யும் அடியாளாக செயல்படும் பாகிஸ்தானின் இயல்பு, ஈரானுக்குத் தெரியாமல் இல்லை! அதை பாகிஸ்தானே வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டது. யுஎஸ் என்ன போஸ்ட் போட வேண்டும் என சொல்கிறதோ அந்த ட்ராஃப்ட்டை அப்படியே அடித்தல் திருத்தல் இல்லாமல் தன் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் பகிர்கிறார். அதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு, மண்டை மேல உள்ள கொண்டையை மறைங்கடா என்று அமெரிக்கா சொன்ன பிறகு அந்த எக்ஸ் தள போஸ்டை நீக்கிவிட்டு, திருத்தப்பட்ட போஸ்ட்டை வெளியிடுகிறது பாகிஸ்தான்.
இப்படிப்பட்ட அமெரிக்க அடிமை பாகிஸ்தான், தங்கள் தரப்புக்கு நியாயமாக நடந்து கொள்ளுமா என்பதை ஈரான் பலமுறை யோசித்துப் பார்த்திருக்காதா என்ன? மேலும் சன்னி முஸ்லிம் நாடாக உள்ள பாகிஸ்தான் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தும் அக்கிரமங்களை, ஷியா முஸ்லிம் நாடான ஈரான் அறியாதா என்ன?
இன்னொருபுறம், இஸ்ரேலியர்களை சீண்டி, யூதர்களை இன அழிப்பு செய்வதே முஸ்லிம் நாடுகளின் கொள்கை என்பதுபோல் போஸ்ட் போட்டு மேலும் கடுப்பேற்றினார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர். அதன் விளைவு, பாகிஸ்தான் நம்புவதற்கு உகந்த நாடல்ல என்று இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்தது. இப்படிப்பட்ட சூழலில் பாகிஸ்தான் முன்னெடுப்பதாக நடித்துக் கொண்டிருக்கும் அமைதிப் பேச்சு எப்படி வெற்றி பெறும்?!
இந்தப் பின்னணியை பாரதம் அறியாதா என்ன? அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக, தன் வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாகக் கடந்து செல்கிறார். அதே நேரம், ஈரான் ஒன்றும் பாரதத்துக்கு நம்பிக்கையான நாடு என்று சொல்வதற்கும் கடந்த கால ஈரானின் நடவடிக்கைகள் வழி செய்யவில்லை.
ஒரு புறம், “காஷ்மீரை ஆக்கிரமிக்காதே பாரதமே” என்று கூவிக் கொண்டு மறுபுறம், “ஈரான் பாரதம் பாய் பாய்” என்று ஈரான் உருட்டுவதெல்லாம் என்ன ரகம்? இஸ்ரேலும் அமெரிக்காவும் தன்னைத் தொடர்ந்து தாக்குவதை அடுத்து, “ஈரானும் இண்டியாவும் நெருங்கிய நண்பர்கள்” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது ஈரான். பாரதத்தின் ஆதரவு தனக்கு முக்கியம் என்பதை இப்போதைய கட்டத்தில் மிகத் தாமதமாக உணர்ந்திருக்கிறது போல!
ஈரான் தன் சமூகத் தளப் பதிவில், ஈரானில் இருக்கும் சாபஹார் துறைமுகத்தைக் காட்டி, “இது ஈரான் இந்தியாவுக்கான தங்கப் பாலம்” என்று குறிப்பிட்டிருக்கிறது.
இந்த சாபஹார் துறைமுகத்தை மோடியின் பாரத அரசு தொடர்ந்து நடத்த பல தடைகளைப் போட்டது ஈரான் அரசு. அத்தனை தடைகளையும் பொறுத்துக் கொண்டது மோடியின் அரசு. அதற்குக் காரணம் INSTC என்று சொல்லப்படும் International North–South Transport Corridor இணைப்புக்கு ஈரானின் சாபஹார் துறைமுகம் முக்கியப் புள்ளி என்பது தான். இந்த இணைப்புப் புள்ளி வழியே தான் பாரதத்தின் பொருட்கள் மத்திய ஆசியா, ரஷ்யா, ஐரோப்பா என பல நாடுகளையும் சென்றடைகிறது.
இதைத் தடுக்க அமெரிக்கா எவ்வளவோ முயற்சியும் செய்தது. மோதிஜியின் பொறுமை முடிவில் வென்றது. என்றாலும், ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் நிச்சயம் என்று தெரிந்ததும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாரதம் வலியுறுத்தியதாகவும், அதை ஈரான் நிராகரித்ததாகவும் செய்திகள் உண்டு. ஈரான் திருந்தப் போவதில்லை என்பதால், சாபஹார் துறைமுகத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை பாரதம். சாபஹார் துறைமுகத்தையும் கைவிட்டது.
இத்தனைக்குப் பிறகும் ஈரான், “சாபஹார் துறைமுகம் ஈரான் இந்தியாவுக்கான தங்கப் பாலம்” என்றெல்லாம் உருட்டுவது என்ன ரகம்? ‘ஈரான் அண்ணே, ரீல் அறுந்து ரொம்ப நாளாச்சுண்ணே… உங்க இந்தியா விரோதப் போக்கை மறக்க மாட்டோம்ண்ணே’ என்று குரல் எழும்புகிறது இந்தியாவில்!
ஆனால் மோடி விரோதத்தை மனதில் கொண்டு இந்தியா விரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகள் மட்டும், ஈரானுக்கு இந்தியா பகிரங்க ஆதரவளிக்க வேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம், இந்தியாவுக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் திருப்பி விட வேண்டும் என்ற தேசவிரோத எண்ணம் மட்டுமே!



