சென்னையில் கொரானாவின் தாக்கம் சமூகத் தொற்றாக மாறியுள்ள நிலையில், குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது.
கோயம்பேடு மார்கெட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, தொழிலாளிகள், வியாபாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. நாளொன்றுக்கு 1 லட்சம்பேர் வந்து செல்லக் கூடிய இந்த மார்க்கெட்டிற்கு, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் கூலி வேலை செய்து வந்தனர்.
தற்போது ஏற்பட்டுள்ள அச்சத்தை தொடர்ந்து 7500 மேற்பட்ட தொழிலாளிகள், கடந்த 3 நாள்களில் அவரவர் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பிவிட்டனர். அவரவர்கள் சென்ற பகுதிகளில் எல்லாம் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சென்றுவிட்ட தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகள் யார் யாரென கண்டறியும் பணி சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
வியாபாரிகள் சங்கத்தை தொடர்பு கொண்டு, பட்டியல் தயாரித்து அவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பும் பணியை சென்னை மாநகராட்சியும், கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழுவும் செய்து வருகின்றன.
இந்நிலையில் கொரானா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய சிம்எம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கோயம்பேடு சந்தையை செவ்வாய்க்கிழமையுடன் (மே 5) இழுத்து மூட முடிவு செய்துள்ளனர்.
பொதுமக்களின் நலன் கருதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட், பூந்தமல்லி அருகே திருமழிசைக்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளனர். மே 7-ம் தேதி முதல் சென்னைக்கான காய்கறி மார்க்கெட் திருமழிசையில் செயல்படவுள்ளது. இதற்காக திருமழிசையில் சந்தை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட் இடமாற்றம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பொதுமக்களுக்குக் காய்கறிகள் தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களைச் சென்றடையவும் சென்னை திருமழிசையில் மே 5ஆம் தேதி முதல் தற்காலிகமாகக் காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் செயல்படும். சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையை ஆட்டுவிக்கும் கொரானா…
தமிழகத்தில் மே 4-ம் தேதி கணக்கெடுப்பின்படி 3550 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் 1724 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
குறிப்பாக கோயம்பேடு சந்தைக்கு நெருக்கமான மண்டலங்களில் ஒன்றான திரு.வி.க. மண்டலத்தில் மட்டும் 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மே 4-ம் தேதி ஒரே நாளில் 266 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை மருத்துவமனைகளில் கொரானா வார்டுகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். புதிதாக வருபவர்களுக்கு படுக்கை வசதிகள் இல்லாததால், கல்லூரிகளில் தற்காலிகமாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
It’s a matter of grave concern that one community is not obeying the social distancing norms prescribed for all by the Govt based on medical advice!