சென்னை: வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் அளவுக்கு ஏமாற்றிய போலி டாக்டர் தம்பதி சென்னையில் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த காமராஜ், சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியராக இருந்தவர். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்… சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் அஜீத் என்ற மாணவனுக்கு நான் வீட்டுக்கு சென்று டியூசன் சொல்லிக் கொடுப்பேன். மாணவன் அஜீத்தின் தந்தை பெயர் ஆனந்தகுமார்(வயது 46). தாயார் பெயர் நிர்மலா(42). ஆனந்தகுமாரும், நிர்மலாவும் தங்களை பெரிய டாக்டர்கள் என்று என்னிடம் தெரிவித்தனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெரிய டாக்டர்களாக பணியாற்றுவதாக அவர்கள் தெரிவித்தனர். சென்னை போலீஸ் கமிஷனரும், மாநகராட்சி கமிஷனரும் தங்களது நண்பர்கள் என்று சொன்னார்கள். மாநகராட்சி கமிஷனரின் தாயாருக்கு தாங்கள்தான் குடும்ப டாக்டர்கள் என்றும் கதை விட்டனர். சென்னையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் நிறைய பேர் எங்களுக்கு தெரியும் என்றும் நாடகமாடினார்கள். தனது செல்வாக்கை பயன்படுத்தி எனக்கு சென்னை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர் வேலை அல்லது மாநகராட்சி தலைமை அலுவலகம் உள்ள ரிப்பன் மாளிகையில் மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக ஆனந்தகுமார் கூறினார். மேலும் பலருக்கும் மாநராட்சி பள்ளிகளிலும், மாநகராட்சி அலுவலகங்களிலும் வேலை பெற்றுத் தருவதாக ஆனந்தகுமாரும், அவரது மனைவி நிர்மலாவும் ஆசை காட்டினார்கள். அதை உண்மை என்று நம்பி, எனக்கும், எனது தம்பி, தங்கைக்கும் அவர்களிடம் வேலை கேட்டு, ரூ.6½ லட்சம் பணம் கொடுத்தேன். எங்களுக்கு வேலைக்கான அரசாணையும் வழங்கினார்கள். அதை வைத்து ரிப்பன் மாளிகைக்கு சென்று கேட்டபோது, ஆனந்தகுமார் கொடுத்த வேலைக்கான அரசாணை போலி என்பது தெரிய வந்தது. மேலும் ஆனந்தகுமாரும், அவரது மனைவி நிர்மலாவும் டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், டாக்டர் படிப்பை பாதியில் விட்டவர்கள் என்றும், தங்களை டாக்டர்கள் என்று ஏமாற்றி நிறைய பேரிடம் இதுபோல் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர், என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும், போலீஸ் கமிஷனருக்கும் நண்பர்கள் என்று சொன்னதும் கட்டுக்கதை ஆகும். இந்த போலி டாக்டர் தம்பதி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். – என்று தெரிவித்திருந்தார். காமராஜ் அளித்த இந்தப் புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதை அடுத்து நடைபெற்ற விசாரணையில் காமராஜைப் போல நிறைய பேரிடம் ஆனந்தகுமார், நிர்மலா தம்பதி மோசடி லீலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இவர்களிடம் ஏமாந்த மேலும் 10 பேர் மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் ரூ.33 லட்சம் அளவுக்கு இருவரும் ஏமாற்றியிருப்பது கண்டறியப்பட்டது. இவ்வாறு மேலும் பலரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இருவரும் கோடிக்கணக்கில் பணமோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனந்தகுமாரும், அவரது மனைவி நிர்மலாவும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். பின்னர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போலி டாக்டர் தம்பதியான ஆனந்தகுமார், நிர்மலா இருவரும் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டவர்கள். டாக்டர் என்று கூறி, மோசடி செய்து பணம் குவித்துள்ளனர். இவர்களிடம் ஏமாந்தவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் ஏமாற்றிய போலி டாக்டர் தம்பதி கைது
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

