ஒரே இரவில் 3 வீடுகளில் கொள்ளை! அதிர்ச்சியில் ஆதம்பாக்கம்!

Published:

robbery
robbery

சென்னை அடுத்த ஆதம்பாக்கம் ஜீவன் நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த கணேஷ் (59), பெருங்குடியில் உள்ள தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருச்செந்தூருக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து கணேசுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். அங்கு விரைந்த போலீசார் சென்று பார்த்தப்போது, வீடு முழுவதும் துணிகள் கலைந்து கிடந்தன.

படுக்கை அறையில் இருந்த 2 பீரோ லாக்கர்கள் உடைக்கப்பட்டு 150 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள், கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

தனது மனைவி வந்தபிறகு தான் கொள்ளைபோன நகையின் முழுமையான அளவு தெரியும் எனவும் கணேஷ் போலீசாரிடம் தெரிவித்தார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

அதேபோல் ஆதம்பாக்கம் ஜீவன்நகர் முதல் தெருவை சேர்ந்த வினோத் என்பவரது வீட்டிலும் கொள்ளை நடந்துள்ளது. பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்களையும் அள்ளிச் சென்று விட்டனர்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கு ஒன்றும் கிடைக்காததால் துணி மணிகளை களைத்துபோட்டுவிட்டு, பாத்திரங்களையும் உருட்டிவிட்டு ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அதேநேரத்தில் தொடர் கொள்ளையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img