செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனுடன் போராடி நகையை மீட்ட 62 வயது மூதாட்டிக்கு காவல்துறையினர் பாராட்டுகளை தெரிவித்து கௌரவித்துள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமாத்தாள். 62 வயதான இவர் பக்கத்து வீட்டு பெண்ணுடன் தென்றல் நகர்பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞன் ஒருவன் ராமாத்தாளின் கழுத்தில் இருந்த 2.5 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்ப முயன்றார்.
ஆனால் ராமாத்தாள் இரு சக்கரவாகத்தை கெட்டியாக பிடித்து கொண்டு வண்டியை நகர விடாமல் சப்தம் எழுப்பினார். ராமத்தாளின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இந்த இளைஞரை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது அவன் கீழே கிடந்த கல்லை எடுத்து பிடிக்க வந்தவர்களை தாக்கி விடுவேன் என மிரட்டியதுடன் தன்னை தானே தாக்கி கொள்ளவும் செய்த நிலையில் அந்த இளைஞரை பிடித்த பொது மக்கள் துடியலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அந்த இளைஞரின் பெயர் தனபால் என்பதும் பட்டதாரி இளைஞர் என்பதும் தெரியவந்தது.
கரூரை சேர்ந்த அந்த இளைஞர் நல்லாம்பாளையம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலை சென்று வந்ததும், சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இரு சக்கர வாகனம் வாங்கியதற்கான தவணையை செலுத்த கடன் கொடுத்த வங்கி தரப்பில் இருந்து கேட்டதால் வேறு வழியின்றி திருட முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செயின் எப்படி திருடுவது என்பதை யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்ட பட்டதாரி இளைஞர் தனபால், முதல் முயற்சியாக வயதான பெண்ணிடம் செய்து பார்க்க திட்டமிட்டுள்ளார் .
முதல் முயற்சியிலேயே ராமாத்தாளிடம் 2.5 பவுண் செயினை திருடிவிட்டு தப்ப முயன்றபோது , அவர் வாகனத்தை கெட்டியாக பிடித்து கொண்டதால் தனபால் சிக்கிக்கொண்டார்.
இதனையடுத்து அவனிடம் இருந்து 2.5 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் துணிச்சலுடன் செயல்பட்ட 62 வயதான ராமாத்தாளை அழைத்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், செயின் பறிப்பு திருடனை தைரியமாக மடக்கி பிடித்தற்காக பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கியதோடு, ஊக்கத்தொகையும் வழங்கி கெளரவித்தார்.