கள்ளநோட்டுக்கள் கொடுத்து மதுபானம் வாங்கியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. அந்த கடைக்கு நேற்று வந்த நபர் ஒருவர் 100 ரூபாய் என 4 நோட்டுகள் வீதம் 400 ரூபாய் கொடுத்து மதுபானம் வாங்கியுள்ளார். அப்போது கடை ஊழியர் அந்த நோட்டுக்களை பார்த்த போது கள்ளநோட்டு என தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக அந்த நபரை பிடித்து அருகேயுள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்து இது குறித்து டாஸ்மாக் விற்பனையாளர் ராமன் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ரஷித்( 54) என்பதும், தற்போது திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்கி புடவைக்கு எம்பிராய்டரி போடும் தொழிலை செய்து வருவது தெரியவந்தது.
மேலும் தான் கொடுத்த ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுகள் என தனக்கு தெரியாது என ரஷித் கூறினார்.
இதனையடுத்து அப்துல் ரஷித் தங்கிய லாட்ஜில் போலீசார் சென்று சோதனையிட்ட போது அங்கு கள்ள நோட்டுகள் எதுவும் சிக்கவில்லை.
பின்னர் 400 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து அப்துல் ரஷித் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குபதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.