சென்னை:
தமிழக அரசு உயர்த்திய பஸ் கட்டணங்களை ஓரளவுக்குக் குறைத்து அறிவித்தது அரசு. அந்தக் கட்டணக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதனிடையே தமிழக அரசு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது, திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பஸ் கட்டணத்தைக் குறைக்குமாறு போராட்டங்களை தீவிரப் படுத்தி வருகின்றன. இந்நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை நேற்று தமிழக அரசு குறைத்தது. இதன்படி, மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழக அரசு மாற்றியமைக்கப்பட்ட கட்டண விகிதங்களின் படி, விரைவுப் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், குளிர்சாதனப் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு கட்டணம் 140 பைசாவில் இருந்து 130 பைசாவாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
இதுபோல், சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
அதிசொகுசு இடைநில்லா பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் வரை கட்டணம் ரூ. 85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 இலிருந்து ரூ. 4 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ. 22 ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தக் கட்டணக் குறைப்பு போதாது என்று கூறி போராட்டங்கள் மேலும் வலுத்து வருகின்றன.



