சென்னை: பார்வையற்றோரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: உலகம் முழுவதும் உள்ள பார்வையற்றோர்களில் சுமார் 20 சதவீதம் பார்வையற்றோர் இந்தியாவில் வாழ்கிறார்கள். தமிழ் நாட்டில் சுமார் ஆயிரம் பேருக்கு நான்கு பேர் பார்வையற்றோராக இருக்கின்றனர். எனவே அரசு – திட்டங்களை வகுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காலங்களில் பார்வையற்றோர் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, பார்வையற்றோர் இல்லாத நிலையை உருவாக்க முனைப்புடன் செயல்பட வேண்டும். பார்வையற்றோருக்கு மாற்றுத் திறனாளி நலத்துறை மூலம் :- பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக குறுந்தகடு இயக்கிகள், பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு வழங்குதல்; பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் உயர் கல்வி பயில உதவி; பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு உதவி தொகை; பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் பார்வையுள்ள நபருக்கு நிதியுதவி; பார்வையற்றோருக்கு ஆரம்ப நிலை பயிற்சி மையம்; பார்வையற்றோருக்கான தொழிற் பயிற்சி (ஆண்கள்); பார்வையற்றோருக்கு ஆசிரியர் பணியிடங்களில் இட ஒதுக்கீடு; பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித் தொகை; பிரெய்லி கைக் கடிகாரங்கள்; பிரெய்லி புத்தகங்கள் வழங்குதல்; – போன்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் அவர்களுக்கு தங்கு, தடையின்றி, முழுமையாக, உரிய நேரத்தில் அரசு வழங்கினால் தான் அதன் முழுப் பயனை அவர்கள் அடைவார்கள். மேலும் பார்வையற்றோர் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதாவது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பார்வையற்றோர் தங்களது 9 அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி போராடி வருகிறார்கள். குறிப்பாக பார்வையற்றோருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்புத் தேர்வு நடத்தவும்; பார்வையற்றோர் பள்ளிகளில் பூர்த்தி செய்யாமல் இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும்; அரசு பணியிடங்களில் அவர்களுக்கு உரிய சலுகைகள், முன்னுரிமைகள், இட ஒதுக்கீடுகள் வழங்கவும்; வேலையற்ற பார்வையற்றோருக்கு நிவாரண உதவித் தொகை முழுமையாக, கால தாமதமின்றி வழங்கவும் – போன்ற தங்களது பல்வேறு உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். காவல்துறை அவர்களது போராட்டத்தை தடுத்து நிறுத்த, அவர்களை தள்ளியும், இழுத்தும் அப்புறப்படுத்த எடுத்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரியில் படிக்கின்ற பார்வையற்ற மாணவர்களையும் மற்றும் பட்டதாரிகளையும் மாநில அரசு பொறுப்போடு அழைத்து, மனிதாபமான அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அதனடிப்படையில் பார்வையற்றோர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு சிறப்புக் கவனம் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
பார்வையற்றோரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும்: ஜி.கே.வாசன்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

