அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் 4 நாள் இலவச மூலிகை கண்காட்சி: இன்று துவங்குகிறது
சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை 4 நாட்கள் மூலிகை கண்காட்சி நடக்கிறது.
இதில், 600க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதுகுறித்து, கல்லூரியின் முதல்வர் கனகவல்லி கூறியதாவது:
அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சார்பாக ஒவ்வொரு வருடமும் மூலிகை கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.
அதேபோன்று, இந்த வருடமும் 15ம் தேதி (இன்று) முதல் 18ம் தேதி வரை 4 நாட்கள் மூலிகை கண்காட்சிகள் நடக்கிறது. மக்களுக்கு தற்போது நிறைய தொற்றுநோய்கள் வருகிறது. எனவே, இந்த மூலிகை கண்காட்சியில் இதை தடுக்கும் விதமாகவும், சித்த மருத்துவத்தினை மக்களுக்கு விளக்கும் விதமாகவும் 600க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
அந்த மூலிகை செடிகளில் அதன் தமிழ் பெயர்கள், மூலிகை பெயர்கள், மருத்துவ பயன்கள், அந்த மூலிகை செடிகள் எந்தவிதமான நோய்களுக்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த கண்காட்சியில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களும் இடம்பெறும். மேலும், 40க்கும் மேற்பட்ட மருத்துவ அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுதானிய உணவு என்பது காணாமல் போயுள்ளது. எனவே, பாரம்பரிய உணவு மற்றும் சிறுதானியக் கண்காட்சிகள் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை இடம்பெறுகிறது.
இதையடுத்து, சித்த மருத்துவம் சார்ந்த மூத்த மருத்துவர்கள் கலந்து கொள்ளும் உரையாடல் நடைபெறும். இதேபோல், யோகா பயிற்சி பற்றியும் எடுத்துரைக்கப்படுகிறது.
மருத்துவ முகாமில் வர்ம சிகிச்சை மற்றும் பாரம்பரிய நெல் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. இந்த மருத்துவக் கண்காட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் செந்தில்ராஜ், இணை இயக்குநர் பார்த்திபன் மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்க்கலாம். 18-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.