சென்னை: ஃபேஸ்புக் மூலம் பழகி காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, பணம் பறித்து ஏமாற்றி மாயமான மனைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கணவர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். தி.நகர் ஜி.என்.செட்டி தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 2009 ம் ஆண்டு சென்னை ஆணழகன் பட்டம் வென்றுள்ளார். அதே பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். கார்த்திகேயன், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுவில், “கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த பெண்ணுடன் எனக்கு ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்குச் சென்ற அவர், மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். திடீரென ஒரு நாள் என்னை செல்போனில் தொடர்பு கொண்ட அவர், ‘எனக்கு உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை. எனக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்று கூறினார். அவர் என்னிடம் ரூ. 2.50 லட்சம் வரை ஏமாற்றியிருக்கிறார். பேஸ்புக் மூலம் இளைஞர்களை ஏமாற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்தப் புகார் குறித்து, பாண்டி பஜார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஃபேஸ்புக் மூலம் காதலித்து திருமணம்: பணம் பறித்து ஏமாற்றியதாக பெண் மீது கணவர் புகார்
Popular Categories


