கூலிப்படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது

Published:

சென்னை: சென்னையில் கூலிப்படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கூலிப்படையினர் அவ்வப்போது மோதலில் ஈடுபடுவதும், அவர்களுக்குள் கொலைகள் நடப்பதும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நடைபெற்ற மோதலில் அண்மையில் 4 பேர் வெட்டிக் கொல்லப் பட்டனர். இந்நிலையில், கொலை செய்து விட்டு தலைமறைவான கூலிப்படையினரைப் பிடித்து சிறையில் அடைக்க காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார். அதன் படி, காவல் துறையினர் சென்னையில் அதிரடியாக வேட்டை நடத்திவந்தனர். அப்போது ரவுடிகள் சிலர் கள்ளத் துப்பாக்கிகளுடன் சுற்றுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து, தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்திய போலீஸார், சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகரைச் சேர்ந்த கூலிப்படை ரவுடிகள் சரவணன் என்ற தொத்துவாய் சரவணன் (46), விக்டர் (29) இருவரையும் துப்பாக்கி முனையில் நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது 2 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வந்த இவர்களுக்கு கொள்ளை வழக்குகளில் தொடர்பு உள்ளதாக போலீஸார் கூறினர்.

Related articles

Recent articles

spot_img