திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கல்லூரி மாணவியை ஒருதலையாகக் காதலித்த இளைஞர் ஒருவர், மாணவி தன் காதலை ஏற்க மறுத்ததால், கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் அருகேயுள்ள பெருவிடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகள் விக்டோரியா(18) மன்னார்குடி அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரின் உறவினரான அதே ஊரைச் சேர்ந்த தனசேகரனின் மகன் தினேஷ் (25) விக்டோரியாவை ஒருதலையாகக் காதலித்து வந்தாராம். வெளிநாட்டில் வேலை செய்துவரும் தினேஷ் கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் தினேஷிடம் சிலர் விக்டோரியா வேறு ஒருவரைக் காதலிப்பதாகக் கூறியுள்ளனர். அதனால் மனம் உடைந்த தினேஷ், விக்டோரியா மீது ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய விக்டோரியாவை, வீட்டுக்கு சுமார் 100 அடி தொலைவில் பின்னால் வந்த தினேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பியோடி விட்டார். தகவல் அறிந்த பெருகவாழ்ந்தான் போலீசார் விக்டோரியாவின் உடலைக் கைப்பற்றி, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தலைமறைவான தினேஷை தேடி வருகின்றனர்.
ஒருதலைக் காதல்: மன்னார்குடி அருகே கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை!
Popular Categories


