
பள்ளிகளுக்கு செல்ல பஸ் வசதி செய்து தரக்கோரி மாணவிகள் விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்த 30 மாணவிகள் புதுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். சொக்கம்பட்டியில் இருந்து நேரடியாக அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மாணவிகள் புதுப்பட்டிக்கு வந்து அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் செவ்வாய் கிழமை சொக்கம்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் 30 பேர் மற்றும் மாணவர்கள் 4 பேர் விருதுநகர் வந்தனர். அவர்கள் அங்குள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சொக்கம்பட்டியில் இருந்து புதுப்பட்டி அரசு பள்ளிக்கு நேரடியாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புதுப்பட்டியில் இருந்து அரசு பஸ்ஸில் செல்லும்போது கண்டக்டர் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாணவிகள் கோஷமிட்டனர்.
பின்னர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரியை சந்தித்து மனு அளித்தனர். அவர் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மாணவிகளின் திடீர் போராட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.