சென்னை:
தாம்பரம்- செங்கோட்டை இடையிலான சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. சேவை தொடங்கிய முதல் நாளே ரயில் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறை அடுத்து, சிறப்பு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.
சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு முன்பதிவில்லா பகல் நேர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. மார்ச் 5,7,12,14 ல் தாம்பரத்தில் காலை 7 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக இரவு 10 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடையும்.
மறு மார்க்கமாக மார்ச் 6, 8, 13, 15 ல் செங்கோட்டையில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு ராஜபாளையம்,சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, கும்பகோணம் வழியாக தாம்பரத்திற்கு இரவு 10 மணிக்கு வந்தடையும்.
முன்பதிவில்லா முழு ரயிலாக இயங்கும் இது, மார்ச் 15க்கு பின், தாம்பரம்-செங்கோட்டைக்கு அந்தியோதயா ரயிலாக தினமும் இயக்கப்படவுள்ளது. நீண்ட தொலைவுக்கு முன்பதிவில்லாத ரயில்களாக இந்த அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படுகின்றன. அழகான வடிவமைப்பு கொண்ட இந்த ரயில் பெட்டிகளில் பயோ டாய்லெட், ரயிலில் குடிநீர் வசதி, செல்போனை சார்ஜ் செய்யும் வசதி, தீயணைக்கும் கருவிகள் என பல வசதிகள் உள்ளன.
தென்மாவட்டங்களிலிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தற்போது செந்தூர் எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம், கும்பகோணம், திருநள்ளாறு என கோயில் நகரங்களுக்கு செல்லும் பல பயணிகள் செந்தூர் எக்ஸ்பிரசை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் அந்தியோதயா ரயில்கள் பகல் நேரங்களில் இயக்கப்பட உள்ளதால் பக்தர்களுக்கும், தென் மாவட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயில் முதலில் ஸ்ரீவில்லிபுத்தூர், கடையநல்லூர் ஆகிய ஊர்களில் நிற்காமல் செல்லும் என்று அறிவிக்கப் பட்டது. இப்போது இந்த இரு ஊர்களிலும் நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.