
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகுவதாக ராகுல், சோனியாவிடம் அழுத்தம் கொடுத்து, அதன் மூலம் கர்நாடக காங்கிரஸ் அரசை வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இன்று கவிச்சக்கரவர்த்தி கம்பரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சதுக்க வளாகத்தில் உள்ள கம்பர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்தார் அமைச்சர் ஜெயக்குமார். சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த கம்பரின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்ற திமுக.,வின் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்; அவ்வாறு செய்யத் தவறினால் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகும் எனக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினார் ஜெயக்குமார்.


