பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது தொடர்பாக, ரஜினி இளைஞர் அணி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது தொடர்பாக தனது மக்கள் மன்றத்தின் இளைஞரணி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை நேரில் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று காலை சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்திருந்தனர்.
வந்தவர்களிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு, அனைவரும் வேனில் ஏற்றிக் கொள்ளப் பட்டு நேராக போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவரது வீட்டில் இளைஞரணி நிர்வாகிகளிடம் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆலோசனை முடிந்து வெளியில் வந்த நிர்வாகிகள் இதுகுறித்துக் குறிப்பிடுகையில், “பாஜக., கூட்டணி தொடர்பாகப் பேசியதாகவும், கூட்டணி குறித்துக் கூறிய போது, சிலர் சிறுபான்மை மக்கள் ஆதரவு பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், மன்றத்தின் நிர்வாகிகளுக்கும், இளைஞரணி நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ஆன்மிக அரசியல் என்று வந்துவிட்டாலே, சிறுபான்மையினர் ஆதரவு நிச்சயம் இருக்காது என்றும், சிறுபான்மையினர் தங்களுக்குள் தனித் தனிக் கட்சிகளை வைத்துக் கொண்டு, மதத் தலைமை சொல்படி கேட்பதால், சிறுபான்மையினர் ஆதரவு என்ற ஒன்றையே நினைத்துக் கொண்டிருப்பது தேவையற்றது என்றும் சிலர் கூறியதாகத் தெரிகிறது.
எனவே தனிக்கட்சி தொடங்கி பாஜக.,வுடன் கூட்டணி வைத்து வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடலாம் என்பதை சிலர் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரம், ரஜினியின் ஆன்மிக அரசியல் என்ற பேச்சு எழுந்த பிறகு, ரஜினிக்கு சமூக வலைத்தளங்களிலும், அரசியல் ரீதியாகவும் பொதுவெளியில் பலரும் மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பது அந்த கூட்டணி அச்சத்தின் காரணத்தால்தான் என்பதை முழுமையாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பாஜக.,வையும் ரஜினியையும் ஒருசேர எதிர்ப்பவர்களின் மன நிலை அந்த அச்ச உணர்வுதான் என்பதையும் ஓரிருவர் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதை அடுத்து, எந்தப் பிரச்னையும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும், 35 ஆண்டுகள் 6 மாதம் வயது ஆன ஒருவர் மட்டுமே ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞரணியில் உறுப்பினராக இருக்க முடியும் என்றும் கூறப்பட்டது.
தொடர்ந்து, மாணவர்கள், மக்கள் மன்றத்தில் இணைய வேண்டும் எனக் கேட்கிறார்களே என்று ரஜினியிடம் யோசனை கேட்டபோது, அதற்கு அவர், மாணவர்களை உறுப்பினராக இணையுங்கள். ஆனால் களப் பணியில் ஈடுபடுத்தாதீர்கள். அவர்களின் படிப்பு வீணாகப் போய்விடக் கூடாது’ என்று கூறினாராம்.
இந்தக் கூட்டத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞரணிக்கு மாநில நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மக்கள் மன்றம் என்பது வேறு; கட்சி என்பது வேறு. மன்றத்தில் சிறப்பாகப் பணிபுரியும் நிர்வாகிகளையே கட்சியையும் நிர்வகிக்க அனுமதிக்கப்படுவார்கள்’’ என்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கூறினர்.




