திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே குழந்தையைக் கொலை செய்த தாய் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கொலை செய்வது எப்படி என யூடியூப் வீடியோவைப் பார்த்து தன் இரண்டரை வயது குழந்தையைக் கொன்றதாக, தாய் வாக்குமூலம் அளித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அருகே உள்ள தோட்டத்து சாலை வீதியை சேர்ந்த வர்கள் நாகராஜ், தமிழ் இசக்கி தம்பதி. இந்த தம்பதியினரின் இரண்டரை வயதுக் குழந்தை ஷிவண்யாஸ்ரீ. நாகராஜ் விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சந்தேகம் எனும் கொடும் நோய், புகுந்தது. கணவர் மீதுள்ள சந்தேகத்தால் தன் குழந்தையை கொன்றதாக தாய் கைதாகியுள்ளார்.
தமிழ் இசக்கி அளித்துள்ள வாக்கு மூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பேசி வந்த நிலையில், இரவில் அதிகமாக வாட்ஸ் அப்பில் மெசெஜ் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவர் மீது சந்தேகமடைந்த தமிழ் இசக்கி, அவரிடம் சண்டை போடுவதை வாடிக்கையாக்கினார்.
மனைவியுடன் பேசுவதை நிறுத்திய நாகராஜ், தொலைபேசி அழைப்புகளையும் தவிர்த்தார். இதனால் விரக்தியடைந்த தமிழ் இசக்கி தற்கொலை செய்ய முடிவெடுத்தார். தான் உயிரிழந்தால் குழந்தையின் கதி என்னாகும் என யோசித்த தமிழ் இசக்கி, வேறு வழியின்றி குழந்தையை கொலை செய்வது எப்படி என யூடியூப் மூலம் வீடியோவை தேடிப் பிடித்துப் பார்த்துள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி, யூடியூப்பில் பார்த்தபடி குழந்தையை தண்ணீர் டிரம்முக்குள் முக்கி, மூச்சடைக்கச் செய்து கொலை செய்துள்ளார். உயிரிழந்த குழந்தையை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து, கட்டிலில் போட்ட தமிழ் இசக்கி, தான் தற்கொலை செய்வதற்காக மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொள்ள முயற்சித்துள்ளார்.
அந்த நேரத்தில் கணவரின் இரு சக்கர வாகன சத்தம் கேட்டதால், மயக்கமடைந்தது போல் கீழே படுத்துக் கொண்டு, அடையாளம் தெரியாத இருவர் தன்னை தாக்கி விட்டு, குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்றதாக நாடகமாடியுள்ளார்.
கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த மங்களம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய தமிழ் இசக்கி, குழந்தையை யூடியூப் வீடியோ பார்த்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார். தானும் தற்கொலைக்கு முயன்றதாகவும், கணவர் வந்ததால் தப்பித்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்த மங்கலம் போலீசார், தமிழ் இசக்கியை கைது செய்துள்ளனர்.