திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்ப்பெயர்கள் மாற்றம் செய்யப்படவுள்ளது அதற்கு பொதுமக்கள் கோரிக்கைகள் எழுதி அனுப்பலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரால், சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்கப்படும் சான்றாக திருவல்லிக்கேணி என்பதை டிரிப்ளிகேன் என ஆங்கிலத்தில் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுதல்) என்று அறிவிப்பினை செயற்படுத்தும் வகையில் தமிழக அரசால் உயர்நிலைக்குழு அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்நிலைக்குழு கூடி, மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், வருவாய் கிராமங்கள், ஊராட்சிகள் உள்ளிட்ட ஊர்ப்பெயர்களை மாற்றம் செய்யவுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்திட கோரிக்கைகள் இருப்பின், அவற்றை எழுத்துப்பூர்வமாக மாவட்ட ஆட்சியரகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு நேரிலும், அஞ்சலிலும், [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சலிலும் 15.11.2018க்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெறப்படும் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்திட அரசுக்குப் பரிந்துரை செய்து அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.