தன்னை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறை ஆய்வாளரைக் கைது செய்ய வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருச்சியில் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றிய முருகேசனுக்கும், திருச்சி கே.கே.நகர். பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா (35) என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பழக்கம் இருந்துள்ளது. பரிமளா குடும்பப் பிரச்னை காரணமாக தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், காவல் ஆய்வாளர் முருகேசன், தனது மனைவியை விட்டு பிரிந்து பரிமளாவுடன் வசித்து வந்துள்ளார். அதன் பிறகு லஞ்ச வழக்கில் முருகேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து முருகேசன் பரிமளாவை விட்டுவிட்டு மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். பின்னர் அவர் நெல்லை மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி திருச்சிக்கு வந்த முருகேசன் தனது வீட்டுக்கே வந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரிமளா போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், பரிமளா திருச்சி அரசு மருத்துவமனை முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடருவேன். மேலும், மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறி திருச்சி காவல் துறை ஆணையர் அலுவலகத்துகே சென்று உண்ணாவிரதம் இருப்பேன்” என்றார்.

