நாளை முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும், இலங்கை கடற்கரை பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கோடை வெய்யில் வாட்டி வதக்கும் நிலையில், பரவலாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து, குடிநீர் பிரச்னை ஓரளவு சரியாகி வருகிறது. இருப்பினும், சென்னை மட்டும் கடும் வெயிலில் தவித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது வரும் 26ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உண்டு. வரும் 27, 28 ஆகிய தேதிகளில் இது புயலாக வலுப்பெற்று, தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
எனவே மீனவர்கள் வரும் 26ஆம் தேதி முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 28ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறினார்.
புயல் எச்சரிக்கை வந்துள்ள நிலையில், கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும், புயலை எதிர்கொள்ள மாவட்ட பேரிடர் மீட்புக்குழு எந்த நேரமும் தயார் நிலையிலேயே உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.