பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சென்செக்ஸ் இன்று 39,000 புள்ளிகளுக்கு உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 490 புள்ளிகள், அதிகரித்து 39.055 புள்ளிகளில் முடிவடைந்தது. நிப்டியும் அதிகரித்து, 11, 726 புள்ளிகளில் முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையில், ஹெச்சிஎல் டெக், இண்டஸ்இந்த் வங்கி, ஓஎன்ஜிசி, பாரதி ஏர்டெல், யெஸ் பேங்க், ஹெச்டிஎப்சி , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டது.
நிப்டியில் ஆட்டோ நிறுவனங்களின் பங்கு மதிப்பு அதிகரித்து காணப்பட்டது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்ற நிலையிலும், இந்திய சந்தையின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், மே மாதத்தில் இருந்து நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை வாரத்தின் துவக்கத்தில் சிறிது அதிகரித்து காணப்பட்டது. அது இன்றைய சந்தை துவக்கத்தில் சற்றே குறைந்தது. இதனால், இந்திய சந்தையின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
இதனிடையே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை செவ்வாய்க் கிழமை மட்டும் ரூ.237.47 கோடிக்கு விற்றுள்ளதாகவும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.198.35 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.