லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில், 2 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி கிராமத்தில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் ஓரமாக நின்றிருந்தது ஒரு கண்டெய்னர் லாரி. அப்போது, வேலூரில் இருந்து வந்த காரின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார், லாரியின் பின் பக்கமாக மோதியது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மகாராஷ்டிர மாநிலம் புல்சாவல் பகுதியை சேர்ந்த மெல்வின் தேஷ்முக் ரயில்வே காவல் துறை அதிகாரி உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புல்சாவல் பகுதியைச் சார்ந்தவர் மெல்வின் தேஷ்முக். இவர் ரயில்வே காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். சுற்றுலா செல்வதற்காக மகாராஷ்டிராவில் இருந்து பெங்களூருக்கு வந்த மெல்வின் தேஷ்முக் குடும்பத்தினர் அங்கிருந்து காரில் வேலூருக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
வேலூரில் இருந்து சுற்றுலாவை முடித்துக்கொண்டு பெங்களூர் நோக்கி காரில் புறப்பட்ட இவர்களது கார் வெங்கிளி அருகே முன்பக்க டயர் வெடித்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின் பக்கமாக மோதியது.
இதில் கார் லாரியின் அடியில் சிக்கி முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி காரில் பயணித்த மெல்வின் தேஷ்முக் குடும்பத்தைச் சேர்ந்த 4 ஆண்களும் இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் விபத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த காரை மீட்டனர். காரில் இருந்து சடலங்களை மீட்ட அவர்கள் தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.