திருவேற்காட்டை சேர்ந்த 25 வயது பெண் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்குமுன்பு அந்த பெண் திடீரென குழந்தைகளுடன் மாயமானார். இதுசம்பந்தமாக அவரது கணவர் பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
விசாரணையில் அந்த இளம்பெண் தனது திருமணத்துக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முரளி (வயது 30) என்பவரை காதலித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து பழைய காதலனை சந்திக்க சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் குழந்தைகளுடன் இளம்பெண்ணை வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பெண் கணவருடன் செல்ல மறுத்துள்ளார் .
மேலும் அந்த பெண் தான் பழைய காதலனுடன்தான் வாழ்வேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். . இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனா். பின்னா் போலீசார் அந்த பெண்ணுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி அவளது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் முரளியை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து முரளி நேற்று முன்தினம் இரவு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது காதலியை பெற்றோருடன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனைதொடா்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது விறு விறுவென ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் அங்கு வந்த போலீசார் முரளியை செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார்கள்.
ஆனால் காதலியை தன்னுடன் அனுப்பி வைக்கும் வரை செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்க மாட்டேன் என்றும், தனது காதலி நேரில் வர வேண்டும் என்றும் அடம்பிடித்தார். இதையடுத்து அவருடைய காதலியை போலீசார் அங்கு வரவழைத்தனர். காதலியை பார்த்தவுடன் முரளி செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார்.
இதையடுத்து பூந்தமல்லி போலீசார் முரளியை கைது செய்து அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.


