நடிகர் விவேக், தனது மகன் பிரசன்ன குமார் நினைவாக சென்னையில் தண்ணீர் மோர்ப் பந்தல் திறந்துள்ளார்.
நடிகர் விவேக், சமூக சேவையில் நாட்டம் உள்ளவர். பலருக்கும் உதவிகள் செய்துள்ளார். தண்ணீர் மோர்ப் பந்தல் வைப்பது, அன்னதானம் செய்வது என்று சமூகப் பணிகளில் கவனம் கொண்டவர்.
இவரது மகன் சாய் பிரசன்ன குமார், கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் பரவிய போது உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பள்ளி மாணவனான பிரசன்னா, மிகச் சிறு வயதில் காலமானது பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது. அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் அவருக்கு ஆறுதல் கூறியிருந்தனர்.
தனது மகன் இழப்பு குறித்து பேசியிருந்த விவேக், ஒவ்வொரு சனிக்கிழமையும் சாயி பாபா கோவிலில் அன்னதானம் செய்து வந்தோம். வருகிறோம். அந்த அன்னதானத்தில் சிப்ஸ் கொடுக்குறது என்னோட பையன் பிரசன்னா. அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது கூட அன்னதானம் பண்றத நிறுத்தல. ரொம்ப விரும்பி அவன் அதை செய்றதைப் பாத்திருக்கேன். அதனால அவன் திரும்பி வர்ற வரைக்கும் அவனோட பணியை நானே செய்யலாம்னு நெனச்சு, நான்தான் அப்போ சிப்ஸ் கொடுத்துட்டு இருந்தேன். எப்பொழுதும் நானே கொடுக்கும்படி ஆகுமென்று நினைக்கவில்லை.
நேரத்திற்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. எப்போதாவதுதான் பேசும் அவன், அடிக்கடி பேசும் வார்த்தை. ‘அப்பா! தண்ணி குடிச்சீங்களா?’. என் கைபேசியில் ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கிறேன். நேரத்திற்கு தண்ணீர் குடிக்கச் சொல்லி அலெர்ட் செய்யும் என்னை அது. இப்போது அந்த அப்ளிகேஷன் ‘Please drink water Daddy by prasanna’ என்று என்னை அலெர்ட் செய்கிறது… என்று கூறியிருந்தார்.
இப்போது கோடைக்காலம் என்பதால், தான் மட்டும் அல்ல, தெருவில் போவோர் வருவோர் என தாகத்தால் தவிக்கும் அனைவருக்கும் தண்ணீர், மோர் கொடுக்கும் வகையில் நீர் மோர்ப் பந்தலை தனது மகன் சாய் பிரசன்னா ஃபவுண்டேஷன் சார்பில் திறந்திருக்கிறார் விவேக்.


