திருவண்ணாமலை கோவிலில் திருட்டு போன ரூ.5 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு…!
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கையால் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அம்மன் கோவிலில் திருட்டு போன ரூ.5 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் பங்களாவில் மிகவும் பழமை வாய்ந்த மனோண்மணி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு மரகதலிங்கம், அம்மனுக்கு அணிவிக்கப்படும் வெள்ளி கிரீடம், தங்க தாலி, தங்க ஒட்டியாணம் போன்ற நகைகள் திருட்டு போனது. மரகதலிங்கத்தின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ.5 கோடி என மதிப்பீட்டளா்கள் கூறுகின்றனா்.
இது தொடர்பாக வேட்டவலம் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தங்கள் வசம் எடுத்து விசாரித்தனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கடந்த 10 நாட்களாக தனிப்படை போலீசாருடன் இணைந்து, வேட்டவலம் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினார்.
இதற்கிடையில் நேற்று மாலை ஜமீன் பங்களா அருகே உள்ள குப்பை தொட்டியில், கோவிலில் திருட்டு போன மரகதலிங்கம் அனாதையாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உடனடியாக பொன் மாணிக்கவேல், வேட்டவலம் போலீசாருடன் சென்று குப்பை தொட்டியில் கிடந்த மரகதலிங்கத்தை மீட்டார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



