
கோவையில் நகை கடை முதலாளியை ஏமாற்றி 450 கிராம் தங்க நகைகளை மோசடி செய்து திருடிய கடை ஊழியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை உள்ள செல்வபுரத்தை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (41). இவர், வைசியாள் வீதியில் நகைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
சங்கரேஸ்வரன் வெளியில் தங்கக்கட்டிகளை வாங்கி, அதை தங்கப்பட்டறைகளில் கொடுத்து ஆபரணங்களாக செய்து வாங்கி, அந்த ஆபரணங்களை தன் ஊழியர்கள் மூலம் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி, 5 கிலோ எடை கொண்ட ஆபரணங்களை அவரது ஊழியரான வேலாண்டிபாளையத்தை சேர்ந்த சண்முகவேல் (45) என்பவரிடம் கொடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள நகைகடைகளில் விற்பனை செய்துவருமாறு கூறியுள்ளார்.
அதன்படி, வியாபாரத்தை முடித்து விட்டு வந்த சண்முகவேல், ஒரு கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக கூறி மீதமுள்ள 4 கிலோ தங்க நகைகளை ஒப்படைத்துள்ளார்.
ஆனால் அவர், கொடுத்த ஆபரணங்களில், ரூ.13 லட்சம் மதிப்புடைய 450 கிராம் தங்க நகை குறைவாக இருந்துள்ளது.
இது தொடர்பாக உரிமையாளர் சண்முகவேலிடம் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார் இதில் சந்தேகமடைந்த சங்கரேஸ்வரன் கடைவீதி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஊழியர் சண்முகவேலுடன், ஆறுமுகம் என்பவரும் இணைந்து நகைகளை திருடி அவற்றை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்த 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஐந்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



